பதவி விலகுங்க.. இந்தியாவை பகைத்துக் கொண்ட நேபாள பிரதமருக்கு ஆளும்கட்சியில் நெருக்கடி!
- ஜி. தனலட்சுமி
காத்மாண்டு: இந்தியாவை பகைத்துக் கொண்ட நேபாள பிரதமர் கே.பி சர்மாஒலி, ராஜினாமா செய்யக் கோரி ஆளும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் அந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலைகுலைந்துள்ளது.
Recommended Video
இந்தியாவுக்கு சொந்தமான உத்தரகண்ட் மாநிலத்தை ஒட்டிய லிம்பியதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாளம் தங்களது பகுதியாக சித்தரித்து புதிய வரைபடம் வெளியிட்டு இருந்தது. இந்த வரை படம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலும் நிறைவேறியது.
இந்த சமயத்தில்தான் இந்தியாவின் வடக்கு லடாக் பகுதியில் இந்தியா ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் முற்றியது. வரையறுக்கப்படாத எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியாவின் பிடியில் இருக்கும் நிலத்தை சீன ராணுவம் ஆக்கிரமித்து இருந்தது. இதை தட்டிக் கேட்ட இந்திய ராணுவ வீரர்களில் 20 பேரை சீன ராணுவ வீரர்கள் கொடூரமாக கொன்றனர். இந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்திய சீன உறவில் உரசல்
இதையடுத்து, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போதைக்கு சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்து இருநாட்டுப் படைகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. ஆனால், சீனா இன்னும் இந்திய நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக சில ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில்தான், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சீனாவால் நேபாளம் இயக்கப்படுகிறது என்று இந்தியா குற்றச்சாட்டை முன் வைத்தது.
நேபாளத்தை வைத்து ஆட்டம் காட்டும் சீனா
எப்போதும், இந்தியாவின் ஆதரவு நாடாக இருக்கும் நேபாளம் தற்போது சீனாவின் பிடியில் இருப்பதாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம், நேபாளத்தில் பெரிய அளவில் முதலீடுகளை சீனா குவித்து வருகிறது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு என்று நிதியுதவி அளித்து வருகிறது. கூடுதலாக நேபாளத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருவதுதான் இன்னொரு முக்கியக் காரணம். 'நேபாள கம்யூனிஸ்ட் கட்சி' நேபாளத்தை ஆட்சி செய்து வருகிறது.
நேபாள பிரதமருக்கு எதிர்ப்பு
இந்த நிலையில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் பிரதமர் ஒலியை ராஜினாமா செய்யுமாறு அவரது கட்சியினரே தற்போது வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு இந்தியா மறைமுகமாக வேலை செய்கிறது என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமர் ஒலி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சிக்குள் புகைச்சல்
பிரதமரின் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அண்டை நாட்டினருடன் புகைச்சலை உருவாக்கும் என்று புஷ்ப கமல் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் ஒளியின் வீட்டில் கட்சியின் நிலைக்குழு கமிட்டிக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் ஒளிக்கு எதிராக குரல் எழுப்பினர். முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தற்போது அந்தக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் வெளிப்படையாகவே பிரதமர் ஒளியை கூட்டத்தில் கண்டித்துள்ளார்.
நெருக்கடி தரும் தலைவர்கள்
இவர் மட்டுமின்றி கட்சியின் மூத்த தலைவர்களான மாதவ் குமார் நேபாள், ஜலநாத் கனல், துணைத் தலைவர் பாம்தேவ் கவுதம், செய்தி தொடர்பாளர் நாராயண்கஞ்ச் ஸ்ரஸ்தா ஆகியோரும் கண்டனம் தெரிவித்ததுடன், பிரதமர் ஒலியை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். ராஜதந்திரமற்ற நிலையில், அரசியல்சாராத வகையில் தெற்கில் நட்பு நாடாக இருக்கும் இந்தியா மீது குற்றம்சுமத்துவது தவறு என்று மூத்த தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ஒலி கப்சிப்
கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த ஒலியால், கட்சிக்குள் இருந்து நேரடியாக எழுந்த விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தாங்கிக் கொள்ள வேண்டியதாக இருந்ததே தவிர அவரால் எந்தவிதக் கருத்துக்களையும் கூற முடியவில்லை. இதையடுத்து தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்த இரண்டு முறை பிரதமராக இருந்த கட்சியின் தலைவர் புஷ்ப கமல் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஆட்சிக்கும் இனி ஒருவரே தலைமை தாங்க வேண்டும் என்ற குரலை எழுப்பியுள்ளார். இது முதல் முறையல்ல, கட்சியினர் ஒலியை ராஜினாமா செய்யுமாறு கோருவது, இரண்டாவது முறையாகும். கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதுபோன்ற குரலை ஆளும் கட்சியினர் எழுப்பி இருந்தனர்.
1880 கி. மீ தூர எல்லை
இந்தியாவும், நேபாளமும் எல்லையில் 1,880 கி. மீட்டர் தொலைவை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் 98% எல்லைப் பகுதியில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், உத்தரகண்ட் மாநிலத்தை ஒட்டிய லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளன. இந்தப் பகுதிகள் மொத்தம் 370 சதுர கிலோ மீட்டரை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதில் உத்தரகண்ட் மாநிலத்தையும், சீனாவின் திபெத் பகுதியையும் இணைப்பதாக லிபுலேக் கணவாய் உள்ளது. ஆதலால்தான் இந்த விஷயத்தில் சீனாவின் அழுத்தம் நேபாளத்திற்கு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.