நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 15,000ஐ தொடும்: நேபாள ராணுவ தளபதி
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரிக்கும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 40 நொடிகள் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்க செய்தி அறிந்தவுடன் இந்தியா தான் முதல் நாடாக நேபாளத்திற்கு மீட்பு குழு, நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது.
நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டம் ஆகியுள்ளன.
பலி
நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கும் என்று நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தொடும் என்று அஞ்சப்படுவதாக நேபாள ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
நில அதிர்வுகள்
நிலநடுக்கம் ஆழமாக ஏற்பட்டிருந்தால் நில அதிர்வுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால் நேபாளத்தில் மேலோட்டமாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் சனிக்கிழமையில் இருந்து தினமும் பல முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. அதில் சில அதிர்வுகள் சக்திவாய்ந்ததாக உள்ளன. நேற்று மட்டும் மூன்று முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
மீட்பு பணிகள்
தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வுகளாலும், அவ்வப்போது பெய்யும் கனமழையாலும் மீட்பு பணிகள் பாதிக்கப்படுகிறது. பல குக்கிராமங்களுக்கு செல்லும் வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை. அத்தகைய இடங்களில் மக்களே இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியை செய்து வருகிறார்கள்.
சிறுவன்
வியாழக்கிழமை மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து பெம்பா லாமா என்ற 15 வயது சிறுவனை உயிருடன் மீட்டனர். 5 மணிநேரம் போராடி நுவாகோட்டைச் சேர்ந்த சிறுவனை காப்பாற்றினர். முன்னதாக இடிபாடுகளில் இருந்து 4 மாத ஆண் குழந்தை காப்பாற்றப்பட்டது. காத்மாண்டு பேருந்து நிலையம் அருகே கிருஷ்ண தேவி கட்கா என்ற பெண் இடிபாடுகளில் இருந்து நேற்று உயிருடன் மீட்கப்பட்டார்.
கோபம்
பல்வேறு இடங்களில் மக்கள் அரசு மீது கடுங்கோபத்தில் உள்ளனர். மீட்பு பணிகள் திருப்தி அளிக்கவில்லை என்று கூறும் அவர்கள் பசியாலும், தாகத்தாலும் தவித்து வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.