நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: ஐ.நா. கவலை
காத்மாண்டு: நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்தில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு நிலைகுலைந்து போயுள்ளது. அங்கு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
குழந்தைகள்
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10 லட்சம் குழந்தைகள் சிக்கியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அவசர நிதியம்(யுனிசெப்) தெரிவித்துள்ளது.
நோய்கள்
நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. இடிபாடுகளை அகற்ற அகற்ற பிணங்களாக வருகிறது. இன்னும் மீட்கப்படாமல் பல உடல்கள் உள்ளன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
குடிநீர்
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போதிய உணவு, நீர் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்குமா என்பது தான் எங்களின் பெரிய கவலை என யுனிசெப் தெரிவித்துள்ளது.
தட்டம்மை
நேபாளத்தில் ஆங்காங்கே கிடக்கும் பிணக் குவியல்களால் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்டம்மை ஏற்படும் அபாயமும் உள்ளது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அவசர நிதியம்.
சாலைகள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு குழுவினர் அந்த ஊர்களை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.