நிலநடுக்கத்தில் சிக்கி 3 நாட்களாக சிறுநீரை மட்டுமே அருந்தி உயிர் பிழைத்த நேபாளி!
காத்மாண்டு: நிலநடுக்கம் காரணமாக கட்டடம் இடிந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருநபர் 3 நாட்களாக சிறுநீரை மட்டுமே குடித்து உயிரைக் கையில் பிடித்தபடி இருந்த அவலம் தெரிய வந்துள்ளது. அந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேபாள நாட்டு நிலநடுக்கம் பல சோக வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. பல ஆயிரம் பேரின் உயிரைக் குடித்த இந்த நிலநடுக்கமானது, பலரைக் காணாமல் போகச் செய்து விட்டது. காணாமல் போனவர்களை தொடர்ந்து மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ரிஷி கனல் என்பவர் 3 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் உயிர் தப்பிய விதம் குறித்து கூறியபோது அனைவருமே மலைத்துப் போய் விட்டனர்.
காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குக் கீழே இருந்த போது நிலநடுக்கம் காரணமாக அந்த ஹோட்டல் இடிந்து விழுந்து அதில் சிக்கிக் கொண்டார் ரிஷி. அவரைச் சுற்றிலும் கட்டட இடிபாடுகளும், பிணங்களுமாக இருந்தனவாம்.
குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில், தனது சிறுநீரையே குடிக்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் இவர். வாயெல்லாம் வெளுத்து, விரல் நகங்கள் எல்லாம் வெளுத்து பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளார் ரிஷி.
3 நாட்கள் இப்படியாக தவித்து வந்த அவரை மீட்புப் படையினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். கிட்டத்தட்ட 80 மணி நேரம் இவர் உயிரைக் கையில் பிடித்தபடி தத்தளித்துள்ளார். அவரை காத்மாண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.