ராமர் நேபாளத்தில் பிறந்தாரா.. ஷர்மா ஒலி சொன்ன இடத்தில் தொல்லியல் ஆய்வு .. புது திருப்பம்
காத்மாண்டு: நேபாளத்தில்தான், கடவுள் ராமர் பிறந்தார் என அந்த நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சொன்னாலும், சொன்னார், அவர் குறிப்பிட்ட இடத்தில், தொல்பொருள் ஆய்வு துவங்கப் போகிறதாம்.
Recommended Video
இந்தியா மற்றும் நேபாள அரசுக்கு இடையே நாட்டு வரைபடம் தொடர்பாக உரசல் ஆரம்பித்து இப்போது வேறு கட்டத்திற்கு போய்விட்டது. சீனாவின் கைப்பாவையாக நேபாளம் மாறி நாட்கள் பல ஆகிவிட்டது.
இந்த நிலையில்தான், நேபாள பிரதமர் ஓலி, சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுவரை சீதை பிறந்த இடம் நேபாளத்தில் இருப்பதாக இந்துக்கள் நம்பி வந்த நிலையில், ஒலி, ராமர் பிறந்தது நேபாளத்தில் என்று தெரிவித்தார்.
கைகோர்த்த இந்தியா, யுகே.. அமெரிக்கா போடும் செம பிளான்.. சீனாவை அசைக்க போகும் "ஹுவாவே" மோதல்!
நேபாள பிரதமர்
பிர்குஞ் என்ற பகுதிக்கு அருகேயுள்ள தோரி என்ற பகுதியில்தான் ராமர் பிறந்தார் என்றார் ஒலி. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். அங்கு ராமருக்கு கோவில் அமைக்கும் பணிகள் நடந்துள்ளன. பாபர் மசூதி இடிப்பு துவங்கி, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை சுமார் 20 வருடங்களாக அயோத்தி என்பது செய்திகளில் தொடர்ந்து வெளியாகும் இடமாக உள்ளது. இந்த நிலையில், நேபாள பிரதமர், ராமர் நேபாளத்தில் பிறந்ததாக கூறியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
கண்டனங்கள்
இந்தியாவிலுள்ள இந்து மத தலைவர்கள் மட்டுமின்றி, நேபாள எதிர்க்கட்சிகளும் ஒலிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து நேபாள வெளியுறவு அமைச்சகம் ஒரு விளக்கம் வெளியிட்டது. அதில், அரசியல் நோக்கத்திற்காகவோ யாருடைய மனதையும் புண்படுத்தவோ ஒலி இவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சகங்களுடன் ஆலோசனை
நேபாள தொல்லியல் துறை, தோரியில் ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்ச்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. நேபாள நாட்டு செய்தித்தாள் ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. "பிர்குஞ்சின் தோரியில் தொல்லியல் ஆய்வுகளைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க தொல்லியல் துறை பல்வேறு அமைச்சகங்களுடன் பல கூட்டங்களை நடத்தி வருகிறது" என்று தொல்லியல் துறையின், செய்தித் தொடர்பாளர் ராம் பகதூர் குன்வார் அந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.
ஆய்வு செய்வது கடமை
பிரதமர் ஒலியின் கருத்துக்கு பிறகு தோரியில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்வதில் எங்கள் துறை தீவிரமாக உள்ளது என்று டிஓஏ இயக்குநர் ஜெனரல் தாமோதர் தெரிவித்துள்ளாராம். "நிபுணர்களுடன் கலந்துரையாடி விரைவில் ஒரு முடிவுக்கு வருவோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
அயோத்தி
உத்தர பிரதேசத்திலுள்ள அயோத்தியில், நடந்த தொல்லியல் ஆய்வில், பூமிக்கு அடியில், இந்து கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில், தொல்லியல் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேபாள ஆய்வு என்ன சொல்லப்போகிறது என்பது தெரியவில்லை. வரலாறு, இதிகாசம் தொடர்பாக பல்வேறு புதிய பரிணாமங்களை நேபாள ஆய்வு திறந்துவிடுமா, அல்லது, ஒலியின் கருத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.