நேபாள பிரதமருக்கு எதிராக எழும் கலக குரல்கள்.. பின்னணியில் 'பழைய ஹீரோ' பிரச்சண்டா.. செம திருப்பம்
கணவரை கூலிப்படை வைத்து ஏவி கொன்ற மனைவி வாக்குமூலம் தந்துள்ளார்
காத்மாண்டு: நேபாள நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி, இந்தியா பற்றி சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக திரும்பியுள்ளன. நேபாள நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதன் பின்னணி என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
நேபாளத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கமிட்டி கூட்டம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தகால், பிரதமர் ஷர்மா ஓலி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமரின் கருத்து அரசியல் ரீதியாகவும் சரி கிடையாது ராஜாங்க ரீதியிலும் சரியானது கிடையாது. அண்டை நாட்டுடனான நமது உறவை பிரதமரின் இந்த பேச்சு கெடுத்துவிடும் என்று குற்றம்சாட்டினார்.
பதவி விலகுங்க.. இந்தியாவை பகைத்துக் கொண்ட நேபாள பிரதமருக்கு ஆளும்கட்சியில் நெருக்கடி!
சதித் திட்டம்
ஞாயிற்றுக்கிழமை ஷர்மா ஒலி அளித்த பேட்டியில், என்னை பதவியிலிருந்து நீக்குவதற்காக தூதரகங்கள் மற்றும் ஓட்டல்களில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. சில நேபாள நாட்டு தலைவர்களும் இந்த விளையாட்டில் ஈடுபட்டு உள்ளனர் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
கிளம்பிய எதிர்ப்பு
இதுகுறித்து நிலைக்குழு கூட்டத்தில், புஷ்ப கமல் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நமது பக்கத்து நாட்டையும் சொந்தக் கட்சி தலைவர்களையும் இழிவாக பேசுவது சரி கிடையாது. அண்டை நாட்டை பகைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அப்போது அவர் தெரிவித்துள்ளார். உயர்மட்ட தலைவர்களான, மாதவ் குமார் நேபாளம், ஜலநாத் கானல், துணைத் தலைவர் பாம்தேவ் மற்றும் செய்தித் தொடர்பாளர் நாராயங்காஜி ஸ்ரேஸ்தா ஆகியோரும் பிரதமர் ஒலியை, தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர், மேலும் அவரை பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
நேபாள பிரதமரின் அத்துமீறல்கள்
நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, இந்திய நிலப்பகுதிகளையும் நேபாள வரைபடத்துடன் இணைத்து, தங்கள் நிலப்பகுதி என மாற்றி அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். இந்த நிலையில், இந்தியா தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். சீனாவின் கைப்பாவையாக நேபாளத்தை அந்த நாட்டு பிரதமர் மாற்றியுள்ளார் என்பதையே இது உணர்த்துகிறது. இந்த நிலையில்தான், அவருக்கு எதிராக ஆளும் கட்சியிலேயே குரல்கள் எழுந்துள்ளன.
யார் இந்த ஒலி
69 வயதான ஒலி, நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர். பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காதவர். கிழக்கு நேபாளத்தில் விவசாயி தர்ம பிரசாத் தக்கல் கொலை செய்யப்பட்டதற்காக ஒலி தனது 22 வயதில் சிறையில் அடைக்கப்பட்டார். 1980 களின் நடுப்பகுதியில் அரசின் பொது மன்னிப்பை பெற்றதால் 14 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வந்தார். 1991ல் நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அரசியலில் அவரது எழுச்சி தொடங்கியது.
ஒரே கட்சியாகின
நேபாளத்தின் இரண்டு முக்கிய இடதுசாரி கட்சிகள் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் கைகோர்த்து உருவாகின. அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தின. அப்போது முதலே பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் ஆகியோருக்கு இடையே பிளவு ஏற்பட்டன. பிரசண்டா என்பது புஷ்பா கமலின் பிரபலமான மாற்று பெயராகும்.
யார் இந்த பிரச்சண்டா
1970 களின் நடுப்பகுதியில் தனது மாணவ பருவ நாட்களில் ஒலியைப் போலவே பிரச்சண்டாவும் அரசியலில் நுழைந்தார். 1990ல் பல கட்சி ஜனநாயக அமைப்பு தொடங்கியபோது, பிரச்சண்டா அதில் சேர விரும்பவில்லை, அதற்கு பதிலாக ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கினார். 1996ல் மாவோயிசத்தை ஏற்றுக்கொண்டார். இந்த போராட்டம் 17,000 பேர் பலியாக காரணமாக இருந்தது.
Recommended Video
சமாதான பேச்சுவார்த்தை
2006 ல் நடந்த ஒரு சமாதான முன்னெடுப்பால் மோதல் முடிவடைந்தது. இந்த சமாதான பேச்சுவார்த்தையில் இந்தியா முக்கிய பங்காற்றியது. அப்போது பிரச்சண்டா ஹீரோவாக உருவெடுத்தார். எனவே இந்தியா மீது அவருக்கு இயல்பான பாசம் இருந்தது. ஆனால் 2008 முதல் அவருக்கும் சீன பாசம் அதிகரித்தது. அது முதல் இந்தியாவுடனான நட்பை குறைத்துக் கொண்டார். இதனிடையே, இந்து ராஜ்ஜியத்திலிருந்து ஒரு மதச்சார்பற்ற, கூட்டாட்சி குடியரசாக நேபாளம் எப்படி மாறும் என்று ஒலிக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் கூட்டணி ஆட்சிக்கான மாற்றமும் இரு தலைவர்களையும் ஒன்றிணைத்தது. 2017 தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டு முடிவுகளுக்குப் பிறகு கட்சிகளை ஒன்றிணைக்க முடிவு செய்தனர். 275 பேர் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் அவர்கள் 174 இடங்களை வென்றனர். அப்போதிருந்து, ஒலி தான் ஒரு ஹீரோவாக உருவெடுத்தார். இந்த நிலையில்தான் பிரசண்டாவுக்கும், ஒலிக்கும் இடையே மோதல் ஏற்படத் தொடங்கியுள்ளது.