நிவாரணப் பணியில் அதிருப்தி .. ‘தன் கையே தனக்குதவி’ - தாங்களே களத்தில் இறங்கிய நேபாள மக்கள்!
காத்மாண்டு: நிலநடுக்கத்தால் சிதைந்து போன நேபாளத்தில் நிவாரணப்பணிகள் திருப்திகரமாக இல்லை என மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால், தாங்களாகவே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதம் 25ம் தேதி நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து வீதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாள அரசு வெளியேறச் சொல்லி விட்டது. இதனால், தற்போது அங்கு நிவாரணப் பணிகள் மட்டும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
ஆனால், அரசின் நிவாரணப் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால், தாங்களாகவே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிலர், இடிந்த கட்டிடங்களில் இருந்து உடையாத முழு செங்கற்களை எடுத்து புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலரோ, மூங்கில்களைக் கொண்டு போஸ்டர்கள் உள்ளிட்ட பொருட்களால் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வாழத் தொடங்கியுள்ளனர்.