மீண்டும் பிரச்சனையாகும் நெட் நியூட்ராலிட்டி.. முக்கியமான இணையதளங்களுக்கு கிடுக்குப்பிடி
அமெரிக்காவில் இணைய சமநிலைக்கு எதிராக சிறிய சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது.
Recommended Video
நியூயார்க்: நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணைய சமநிலை பற்றிய பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது. அமெரிக்காவில் இணைய சமநிலைக்கு எதிராக சில சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
அமெரிக்காவில் கொண்டுவரப்படும் இந்த சட்ட திருத்தம் காரணமாக இந்தியாவின் இணையதள சேவைகள் பாதிக்கப்பட உள்ளது. மேலும் இது மறைமுகமாக இந்தியர்களின் இணைய சமநிலையை கேள்விக்கு உள்ளாக்கும்.
ஏற்கனவே பலமுறை இந்த இணைய சமநிலைக்கு பிரச்சனை உருவாகி இருந்தாலும் இந்த முறை அமெரிக்க அரசாங்கமே இணைய சமநிலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர இருக்கிறது. இது மொத்த உலகத்தின் வளர்ச்சியையும், சமத்துவத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும்.
இணைய சமநிலை
தற்போது நாம் பயன்படுத்தும் இணையதளங்கள் அனைத்திற்கும் ஒன்றாகவே பணம் கட்டுகிறோம். 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து நெட் பயன்படுத்தினால், நாம் அனைத்து இணையதளங்களையும் பார்க்க முடியும். இதுதான் இணைய சமநிலை. ஆனால் இணைய சமநிலைக்கு எதிரான சட்டம் என்பது இதில் பிரச்சனையை உண்டாக்கும். எப்போதும் போல 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், நம்மால் எல்லா இணையதளங்களையும் பார்க்க முடியாது. சில இணையதளங்களை மட்டுமே இயக்க முடியும்.
என்ன பிரச்சனை
இணைய சமநிலைக்கு எதிரான சட்டம் வந்தால் நாம் செய்யும் ஒவ்வொரு இணையதள செயலுக்கும் தனியாக பணம் கட்ட வேண்டி இருக்கும். வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்ப தனி பணமும், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட தனி பணமும் கட்ட வேண்டி இருக்கும். இது மக்களை பாதிக்கும் என்பதால் இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைப்பான டிராய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அதேபோல் 2015ல் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இணைய சமநிலைக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வந்து இருந்தார்.
மீண்டும் பிரச்சனை ஆகிறது
தற்போது இந்த இணைய சமநிலைக்கு மீண்டும் பிரச்சனை வந்து இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது இதற்கு எதிராக இணைய சமநிலை சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி சில முக்கிய இணையதளங்களை உபயோகப்படுத்த நாம் பணம் கட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதில் வளர்ந்த இணையத்தளங்களும், நாம் அதிகம் பயன்படுத்தும் இணையதளங்களும் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சட்ட திருத்தம் முழுமையாக கொண்டு வரப்படும்.
என்ன மாதிரியான பாதிப்பு
இந்த சட்டம் காரணமாக இணைய உலகில் பெரிய நிறுவனமாக இருக்கும் அனைத்து தளங்களும் இன்னும் வளர்ச்சி அடையும். பேஸ்புக், யூ டியூப் போன்ற இணையதளங்கள் எளிதாக முன்னேற்றம் அடையும். ஆனால் அதற்கு போட்டியாக உருவாகும் நிறுவனங்களின் வளர்ச்சி அடியோடு பாதிப்படையும். இதனால் இந்தியாவின் தொழில் முனைவோர்களின் வாழ்க்கை நாசமாகும். மிக முக்கியமாக மொத்த இணையதள உலகமும் அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு மறைமுகமாக செல்லும்.