ஜெர்மனியில் மோடியை சந்தித்த நேதாஜியின் பேரன்...நேதாஜி பற்றிய ரகசியங்களை வெளியிட வலியுறுத்தல்
பெர்லின்: நேதாஜியின் உறவினர்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பெர்லினில் நேதாஜியின் உறவினர் சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 18ஆம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் பலியானதாக நம்பப்படுகிறது. இவரது மரணம் பற்றிய ரகசியத்தை வெளியிட வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.
மரணம் பற்றிய ரகசியம்
40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை நேதாஜியை பற்றிய 100க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உளவு பார்ப்பு
இந்த விபத்துக்கு பின், 1948ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968ஆம் ஆண்டு வரை நேதாஜியின் குடும்பத்தினரை உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நேதாஜியின் நெருங்கிய உறவினர்களான சிசிர்குமார் போஸ் (நேதாஜியின் சகோதரர் மகன்), அமியாநாத் போஸ், அவருடைய ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் 1948ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968ஆம் ஆண்டு வரை உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கண்காணிப்பு வளையத்தில்
இவர்கள் உளவுத்துறையின் வளையத்துக்குள் இருந்தும் உள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது. அண்மையில் அனுஜ் தர் என்னும் எழுத்தாளர் எழுதிய ‘இண்டியாஸ் பிக்கஸ்ட் கவர்-அப்' என்ற புத்தகத்தில் நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மோடியுடன் சந்திப்பு
இந்நிலையில் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடியை நேதாஜியின் பேரன் உறவான சூர்யகுமார் போஸ் நேரில் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியிடம் நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடும்படி வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடியும், இவ்விவகாரத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டு பரிசீலனைக்கு பின்னர் முடிவு எடுப்பதாக தெரிவித்து உள்ளார்.
நம்பிக்கை தரும் பதில்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூர்ய குமார் போஸ் "ஆவணங்களை பார்க்காத நிலையில், வெளிப்படுத்துவது தொடர்பாக தன்னால் முடிந்தவரையில் முயற்சி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார், ஆவணம் தொடர்பாக தீர்ப்பு அளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்".
மோடி வாக்குறுதி
இது மிகவும் நேர்மையான பதில் என்று கூறிய சூர்ய குமார் போஸ், இவ்விவகாரத்தை கருத்தில் கொள்வதாகவும், எதாவது செய்வதாகவும் வாக்குறுதியாவது அளித்து உள்ளார். நானும் நம்பிக்கையாக உள்ளேன் என்றார்.