டயானாவின் ‘மர்ம’ விபத்தில் அவரது கார் டிரைவருக்கும் தொடர்பு: புதிய தகவல்
லண்டன்: இளவரசி டயானாவின் மரணத்தில் அவரது கார் ஓட்டுநருக்கும் முக்கிய தொடர்பிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவியான டயானா தனது காதலருடன் காரில் பயணம் செய்த போது, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேகமாகச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலியானார்.
அவரது மரணம் குறித்து இன்னும் மர்மம் விலகாத நிலையில், தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், விபத்தில் சிக்கிய போது டயானா கர்ப்பமாக இருந்ததாகவும், எனவே டயானாவைக் கொல்ல அவரின் கார் டிரைவரே உளவாளியாக செயல் பட்டதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
காதல் தேவதை டயானா....
இங்கிலாந்து இளவரசர் சார்லசை காதல் திருமணம் செய்து கொண்டவர் டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சார்லசுடன் வாழ்ந்த போதே தான் வேறொருவரைக் காதலிப்பதாக அறிவித்தார் டயானா.
விபத்தில் பலி....
இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகரில் காரில் சென்ற போது தங்களை புகைப்படம் எடுக்க துரத்தி வந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டும்படி டிரைவருக்கு டயானா உத்தரவிட்டார். சுரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா - டோடி ஃபயீத் இருவருமே விபத்தில் சிக்கி பலியாகினர்.
ரகசிய ஏற்பாடு....
சமீபத்தில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் டயானாவின் கார் டிரைவரே டயானாவைக் கொல்ல அரச குடும்பத்தால் நியமிக்கப்பட்ட உளவாளி என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
புதிய புத்தகம்....
அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், விபத்தில் சிக்கிய டயானாவை பாரீசில் உள்ள பிட்டி - சல்பெட்ரியர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தபோது அவரது வயிற்றை 'எக்ஸ்-ரே' எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 - 10 வார கருவினை கண்டதாகவும், இத்தகவல் ஆஸ்பத்திரி குறிப்பேடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கௌரவக்கொலை....
மேலும், அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி இங்கிலாந்து அரண்மனை டயானாவைக் கௌரவக்கொலை செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுத்தப் பொய்...
டயானாவின் கார் டிரைவர் செயற்கையாக விபத்தை ஏற்படுத்த உத்தரவிடப் பட்டிருந்ததாகவும், அதனடிப்படையிலேயே அந்த விபத்து நடந்தது எனவும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், காரை ஓட்டிய போது அளவுக்கதிகமாக டிரைவர் மது அருந்தி இருந்ததாக பிரேத பரிசோதனையில் கூறப்பட்டிருப்பது பொய் என மறுத்துள்ளார் பவர்.
மூடி மறைக்கப்பட்ட ரகசியம்....
அதேபோல், கர்ப்பமாக இருந்த டயானாவின் வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் பிணத்தை தைலத்தில் போட்டு டோடி ஃபயீத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் ரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டதாகவும் அலன் பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.