என்னண்ணே சொல்றீங்க.. மீண்டும் ஒரு வைரசா...வாயே திறக்காத சீனா!
பீஜிங் : கொரோனா வைரசின் தாக்கலில் இருந்தே உலக நாடுகள் மீளாத நிலையில், சீனாவில் மேலும் ஒரு வைரசின் இரண்டு வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த முறையும் வாய்திறக்காமல், சீனா தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் உள்ள இறைச்சி சந்தை ஒன்றில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. இந்த முறை சீனாவின் 4 வது பெரிய பன்றி இறைச்சி பண்ணையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை பரப்பும் 2 வைரஸ் மாதிரிகள், சுமார் 1000 க்கும் மேற்பட்ட பன்றிகளை தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதே போன்றதொரு பன்றிக்காய்ச்சல் 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளிலும் சீனாவில் பரவியது. அப்போது அதிக அளவிலான பன்றி இறைச்சி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வருது புதிய வைரஸ் :
இந்த புதிய வைரசானது கெட்டுப்போன இறைச்சி மூலம் உலகம் முழுவதும் பரவக்கூடியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில பன்றி இறைச்சி வகைகளில் இந்த வைரஸ் பல மாதங்கள் வரை வாழக்கூடிய தன்மை கொண்டது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் எப்படி உருவானது என்றே தெரியவில்லை என கூறும் சீன பன்றி பண்ணை ஆய்வாளர்கள், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்று மிக குறைந்த அளவே தெரியும் என்கின்றனர்.
மருந்தே கிடையாது :
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலை பரப்பும் வைரசில் எம்ஜிஎப் 360 என்ற ஜீனை அழித்து விட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் இந்த உருமாறிய வைரஸ் ஆபத்தான நிலையில் உள்ளதால் இதில் தடுப்பு மருந்து கண்டறிய முடியாது என ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களை பாதிக்காது :
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்து ஏதும் இல்லை என்றாலும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. ஆனால் இந்த வைரசிடம் இருந்து பன்றிகளை காப்பாற்ற சீன பண்ணை பராமரிப்பாளர்கள் பலர் போராடி வருகின்றனர்.
மவுனம் காக்கும் சீனா :
இத்தனை விபரங்கள் வெளிவந்து, பலர் கேள்வி எழுப்பிய போதும் சீன வேளாண் துறை அமைச்சகம் இதுவரை எதற்கும் பதிலளிக்கவில்லை. அதே சமயம் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலுக்கு அங்கீகரிக்கப்படாத தடுப்பு மருந்தை பயன்படுத்தினால், அது மிக கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என சீனா எச்சரித்துள்ளது. சில வைரஸ்களுக்கு சட்ட விரோத மருந்துகளை பயன்படுத்தியதால் தான் பல கடும் விளைவுகள் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன வேளாண் அமைச்சகம் கூறி இருந்தது.
நெருக்கடியில் சீனா :
கோவிட் 19 பரவல் காரணமாக உணவு பாதுகாப்பை சீனா பலப்படுத்தி உள்ளதால் சீனாவில் பன்றி இறைச்சி விலை வரலாறு காணாத அளவிற்கு மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இதுனால் உள்நாட்டிலேயே சீனா கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் பன்றிகளிடையே பரவி வருவது சீனாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா, அப்படி பரவினால் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.