விடுதலை புலி தலைவர்கள் சரணடைந்த பின்னர் படுகொலை- புது ஆதாரம் வெளியீடு
சிட்னி: தமிழீழ விடுதலைப் புலி தலைவர்கள் பலர் சரணடைந்த பின்னர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புதிய ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை இறுதிப் போரில் புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், தளபதி புலித்தேவன், கேணல் ரமேஷ் உள்ளிட்டோர் சிங்கள ராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் சிங்கள படை வீரர்கள் சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இது தொடர்பாக புதிய ஆதாரங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இறுதிப் போரின் போது பிரபாகரனின் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் இதுதொடர்பான ஆதாரங்களை வழங்கியாக அந் நிறுவனம் கூறியுள்ளது.
"நடேசன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பலர் வெள்ளை கொடிகளுடன் சிங்கள படையினரிடம் சரண் அடைந்தனர். ஆனால் சரண் அடைந்த சில மணித் துளிகளில் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று பிரபாகரனின் பாதுகாப்பு படை வீரர் கூறியுள்ளார்.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சிங்கள படையால் நான் கைது செய்யப்பட்டேன். பின்னர் வாகனத்தில் என்னை ஏற்றிச் சென்றனர். அப்போது புலித்தேவன், ரமேஷ், நடேசன் ஆகியோர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அதை பார்த்தேன் என்று கூறியுள்ளார்.