யு.எஸ்.: பச்சிளம் பெண் குழந்தையை நடுத்தெருவில் எரித்துக் கொன்ற தாய்
நியூஜெர்சி: அமெரிக்காவில் பச்சிளம் பெண் குழந்தையை தீ வைத்து எரித்துக் கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள பெம்பர்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஹைபர்ன்கெம்பர்லி டோர்விலியர்(22). அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சைமன்டவுன் ரோட்டில் தனது பச்சிளம் பெண் குழந்தை மீது ஏதோ திரவத்தை ஊற்றி எரித்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது குழந்தை எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் தீயை அணைத்து குழந்தையை பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மணிநேரம் கழித்து குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.
போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து டோர்விலியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை.
இது குறித்து பெம்பர்டனைச் சேர்ந்த டேவ் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இளம்பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கி நடுத்தெருவில் வைத்து எதையோ எரித்தார். என்ன எரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நாயின் கழிவை எரிப்பதாக தெரிவித்தார். அந்த பெண் பதட்டமின்றி இருந்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என்றார்.