யு.கே. அமைச்சர் ப்ரீத்தி இடியமீனுக்கு பயந்து உகாண்டாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஓடிவந்தவரின் மகள்
லண்டன்: இங்கிலாந்தின் வேலைவாப்பு துறை அமைச்சர் ப்ரீத்தி பட்டேல் சர்வாதிகாரி இடியமீனுக்கு பயந்து 1970களில் இங்கிலாந்துக்கு ஓடிவந்தவரின் மகள் ஆவார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் டேவிட் காமரூனின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி பட்டேல் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் வசித்து வரும் ப்ரீத்திக்கு 6 வயதில் மகன் உள்ளார். இங்கிலாந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டாவது ஆசிய பெண் ப்ரீத்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாரனஸ் வார்சி வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.
முன்னதாக அவரது தந்தை சுஷீல் பட்டேல்(64) யுகேஐபி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அறிவிப்பு வெளியான 90 நிமிடங்களில் தேர்தலில் இருந்து வாபஸ் பெறப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
சுஷீல் 40 ஆண்டுகளுக்கு முன்பு சர்வாதிகாரி இடியமீனுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் குடியேறியவர். நார்ஃபோக்கில் தபால் நிலையம் நடத்தி வந்த அவர் மேற்கு லண்டனில் கடை ஒன்றை தற்போது நடத்தி வருகிறார்.
பெற்றோர் பற்றி ப்ரீத்தி கூறுகையில்,
எனது பெற்றோர் உகாண்டாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் இங்கிலாந்திற்கு ஒன்றும் இல்லாமல் வந்து கடின உழைப்பால் தற்போது கடை வைத்துள்ளனர் என்றார்.