ஐ.எஸ். பிடியில் இருந்த சிரியாவில் 16-வது மனித புதை குழி.. தோண்ட தோண்ட சடலங்கள்!
ரக்கா: ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கடைசி புகலிடமான சிரியாவின் ரக்கா மாகாணத்தில் 16-வது மனித புதை குழியில் 19 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் தனி அரசை உருவாக்குவதாக அறிவித்துக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் 2014-ல் விஸ்வரூபமெடுத்தது. இந்த தனி அரசின் தலைநகராக சிரியாவின் ரக்கா நகரம் இருந்து வந்தது.
உலகையே உறைய வைக்கும் மிக கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை ஐ.எஸ். இயக்கம் அரங்கேற்றியது. ஆனாலும் இந்த இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்டு வெளிநாட்டு இளைஞர்கள் பலரும் இணைந்தனர்.
சர்வதேச நாடுகள் ஓரணியில்..
உலக நாடுகளுக்கு ஐ.எஸ். இயக்கம் பெரும் சவாலாக இருந்தது. இதனையடுத்து சர்வதேச நாடுகள் ஓரணியில் திரண்டு ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தன. 2017-ல் ஐ.எஸ். இயக்கத்தின் பிடியில் இருந்த அத்தனை நாடுகளும் விடுவிக்கப்பட்டன.
கடைசி புகலிடம் ரக்கா
ஐ.எஸ். இயக்கம் கடைசியாக சிரியாவின் ரக்கா நகரில்தான் தஞ்சமடைந்திருந்தது. தற்போது ரக்கா நகரம் மீண்டும் எழுந்து வருகிறது. யுத்தத்தால் நிர்மூலமான வீடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மனித புதைகுழிகள்
இந்த சீரமைப்பு பணிகளின் போது மனித புதைகுழிகள் வெளிப்பட்டும் வருகின்றன. ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட பயங்கரவாதிகள், விமான தாக்குதலில் கட்டிடங்களோடு புதையுண்டு போன பொதுமக்கள் சடலங்கள் இந்த மனிதபுதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை 5,000 சடலங்கள்
இதுவரை சுமார் 15 மனித புதை குழிகளில் இருந்து 5,000 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஐ.எஸ். பயங்கரவாதிகளுடையது. வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை. அதேநேரத்தில் 1,000 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புதிய மனித புதை குழி
இந்நிலையில் 16-வது மனித புதை குழி ஒன்று அண்மையில் தோண்டப்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீடு ஒன்றை தங்களது பாசறையாக பயன்படுத்தியிருந்தனர். அந்த வீட்டில்தான் இந்த மனித புதை குழி தோண்டப்பட்டுள்ளது.
மனிதபுதை குழியில் 19 சடலங்கள்
அதில் 19 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சடலங்களாகும். மேலும் பெண்கள், குழந்தைகளின் சடலங்களும் தோண்டப்பட்டுள்ளன. சிரியாவைப் பொறுத்தவரை உள்நாட்டு யுத்தம், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடனான யுத்தம் என 8 ஆண்டுகாலம் போர் பூமியாக இருந்தது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 2,00,000 பேர் காணாமல் போயுள்ளனர் என ஐநா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.