ஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பத்தோடு கொசுவுக்காக புதிய ரேடார் கருவியைக் கண்டுபிடித்த சீனா!
கொசு ஒழிப்பிற்காக ஏவுகணைப் பாதுகாப்பு தொழில்நுட்பத்தோடு புதிய ரேடார் கருவியை சீனா கண்டுபிடித்துள்ளது.
பெய்ஜிங்: கொசுவைக் கண்டுபிடித்து ஒழிப்பதற்கு, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்ப சாதனத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
சின்னஞ்சிறிய கொசுவால் மனிதர்களுக்கு விதவிதமான நோய்த்தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இதனால் உலகளவில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரப்படி ஆண்டுதோறும், சுமார் 10 லட்சம் பேர் கொசுவால் பரவும் நோய்களால் உயிரிழக்கின்றனர்.
எனவே கொசுவை ஒழிப்பதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் நாட்டில் வீடுகளில் கொசுவர்த்தி, கொசு ஒழிப்புத் திரவம் பயன்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் நீர்த் தேங்கும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.
இந்நிலையில் சீனா நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுவை ஒழிக்க புதிய ரேடார் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ரேடார் உருவாக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த ரேடாரின் உதவியோடு, 2 கிமீ சுற்றளவில் உள்ள கொசுக்களை நாம் அறிந்து கொள்ள முடியும். ரேடாரில் இருந்து அதிவேகமாக மின்காந்த அலைகள் வெளியேறும் வகையில் அந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை, அருகில் உள்ள கொசுக்கள் மீது பட்டுத் திரும்புவதன் மூலம் கொசு குறித்த விபரங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்தக் கருவியின் உதவியால் அந்தக் குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள கொசுக்களின் பாலினம், அவற்றின் பறக்கும் வேகம் மற்றும் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட கொசு சாப்பிட்டுள்ளதா அல்லது பசியோடு மனிதர்களைக் கடிக்க சுற்றிக் கொண்டிருக்கிறதா என்பது வரை இந்தக் கருவி தெளிவாகச் சொல்லி விடுமாம். பின்னர் கொசுக்களின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப நம்மால் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.
மொத்தத்தில் இந்த புதிய ரேடார் சாதனத்தின் மூலம் 2 கிமீ தொலைவில் உள்ள கொசுக்களை கண்டறிந்து, அவற்றை அழித்துவிட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மற்ற நாடுகளில் பறவைகள் மற்றும் பெரிய பூச்சியினங்களின் நகர்வுகளைக் கண்காணிக்க பொதுமக்களுக்கான ரேடார் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உலகத்திலேயே முதன்முறையாக கொசுவைக் கண்காணிக்க சீனா ராணுவ தொழில்நுட்பத்துடன் ரேடாரை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.