தமிழகத்தில் உலகளாவிய அளவில் தமிழர்களை ஒன்றிணைக்க விரைவில் புது அமைப்பு துவக்கம்
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் (டிடிஎஸ்) வெளிநாட்டில் இருந்து வந்த விருந்தினர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியை கடந்த 23ம் தேதி மாலை அரேபியன் பார்க் ஹோட்டலில் நடத்தியது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிடிஎஸ் நிறுவனர் ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், அமீரகத் தலைவர்களின் முயற்சியால் அமீரகம் வியத்தகு வளர்ச்சியினைக் கண்டு வருகிறது. இத்தகைய வளர்ச்சிகளுக்கு முக்கியக் காரணமாக இருந்து வரும் ஆட்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் அமீரகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே டிடிஎஸ்- இன் செயல்பாடுகள் இருக்கும் என்றார்.
நிகழ்ச்சிக்கு ஏ. லியாக்கத் அலி முன்னிலை வகித்தார், ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க தமிழ்ப் பிரமுகர் முனைவர் ராஜன் நடராஜன், சின்னத்திரை பாடகர்கள் அகிலேஷ், சுகன்யா, யாழினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் முனைவர் ராஜன் நடராஜன். தமிழகத்தில் அயலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வண்ணம் டிடிஎஸ் உடன் இணைந்து அமைப்பு ஒன்று விரைவில் தோற்றுவிக்கப்படும் என்றார். மேலும் மேரிலேண்ட் கவர்னர் டிடிஎஸ் அமைப்புக்கு அளித்த பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
52 வயதாகும் ராஜன் நடராஜன் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் துணைச் செயலராக பணிபுரிந்து வகிறார். இம்மாகாணத்தில் இத்தகைய உயர் பொறுப்பை வகித்து வரும் இந்தியத் தமிழர் இவர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறனை அறிந்து அமெரிக்க அதிபர் ஒபாமா இவருக்கு பல்வேறு நிலைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியலில் முனைவர் பட்டமும், அமெரிக்காவின் மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். உடல் நல தொழில்நுட்பம் ஒன்றிற்காக அமெரிக்க பேடண்ட்டும் பெற்றவர்.
மேரிலேண்ட் இந்திய வர்த்தக்குழுவின் தலைவர், ஆசிய பசிபிக் அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காம்ர்ஸ், அமெரிக்க இந்திய சேம்பர் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்டவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
இவர் புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு எனும் ஊரைச் சேர்ந்தவர். தனது பணிகளுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது கிராமத்திற்குச் சென்று வருவதாக தெரிவித்தார். டிடிஎஸ் மூலம் அமீரகத் தமிழகளுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகிடைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பிரசன்னா, கீதா கிருஷ்ணன், சுந்தர், நிர்வாகக்குழு பாலகிருஷ்ணன், விஜயராகவன், விஜயேந்திரன் பத்திரிகையாளர்கள் வி.களத்தூர் ஷா, முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.