அமெரிக்கா விசா வேண்டுமா?... அப்படீன்னா பேஸ்புக், டிவிட்டர் ஐடியெல்லாம் கொடுங்க முதல்ல!
சென்னை: இனிமேல் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்றால் விசா கோரி விண்ணப்பிப்பவர்கள் தங்களது சோசியல் மீடியா அக்கவுண்ட் விவரங்களை விசா விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சென்று படிக்க வேண்டும், அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என்பது இந்தியர்கள் பலரின் கனவு. அதிலும் அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கவேண்டும் என்பது பலரது வாழ்க்கை லட்சியம்.
அப்படி இனிமேல் அமெரிக்காவுக்கு செல்ல விரும்புபவர்கள், தங்களது பேஸ்புக், ஃபிளிக்கர், கூகுள், இன்ஸ்டாகிராம், லிங்கெடின், யூ டியூப் போன்றவற்றின் விவரங்கள், ஈ-மெயில் விவரங்கள் போன்றவற்றை அளிக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகள் வந்துள்ளன. சோசியல் மீடியா செயல்பாடுகள் மூலம் அந்த நபரின் 5 ஆண்டுக்கால வரலாறு ஆராயப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவு தந்த உற்சாகம்.. கமல் கட்சியில் பிறக்கிறது இளைஞரணி..!
தீவிரவாத அச்சுறுத்தல்
அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதால் ஈரான், ஈராக் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை, அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ளது. தீவிரவாதிகள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்று அமெரிக்காவுக்குள் நுழைந்து வருகிறார்கள் என்று அமெரிக்க அரசு கண்டுபிடித்துள்ளது. பயங்கரவாதிகளின் இந்த செயல்களை தடுக்க அமெரிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
புதிய விதிமுறை
இதன்படி அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களோடு, கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை அளிக்க வேண்டும் என்று அந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விசா கோரி விண்ணப்பித்தவர்களின் சமூக வலைதள பதிவுகளை தீவிரமாக ஆராய்ந்து, அவர்களுக்கு பயங்கரவாத பின்னணி உள்ளதா என அறிய திட்டமிடப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்படும்
புதிய விதிகளின் படி, விசா விண்ணப்பதாரர்கள், தங்கள் உடன் பிறந்தவர்களின் பெயர்கள், பிறந்த நாள் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். அதோடு முந்தைய சர்வதேச, உள்நாட்டு பயண விபரங்களையும், விண்ணப்பதாரர் தர வேண்டும். அதிபர் ட்ரம்பின் இந்த உத்தரவு காரணமாக ஓராண்டிற்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசு ரீதியான விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு விசா
உலக அளவில் சுமார் ஒன்றரை கோடி பேர் விசா பெற்றுள்ளனர். இதில், கடந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியர்களுக்கு அமெரிக்கா 8 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.