விமான தேடல்: ஏற்கனவே சிக்னல் கிடைத்த இடத்தில் இன்று மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது
பெர்த்: இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தை தேடுகையில் ஏற்கனவே கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்த அதே இடத்தில் இன்று மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியதாக கூறப்படும் மலேசிய விமானத்தை பல நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் தீவிரமாக தேடி வருகின்றன. விமானத்தை தேடி வரும் சீன விமானம் கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கடந்த வாரம் கண்டறிந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய கடற்படை கப்பலும் சிக்னலை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக கண்டறிந்துள்ளது.
பின்னர் ஆஸ்திரலேய கடற்படை கப்பல் மீண்டும் கடலில் கருப்புப் பெட்டி சிக்னலை கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்தது. சிக்னல்கள் வந்த இடத்தில் விமானங்களும், கப்பல்களும் மலேசிய விமானத்தை தேடி வருகின்றன.
இந்நிலையில் ஏற்கனவே சிக்னல்கள் வந்த இடத்தில் ஆஸ்திரேலிய விமானம் ஒன்று இன்று மீண்டும் சிக்னலை கண்டறிந்துள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரி ஆயுள் கடந்த 7ம் தேதி முடிந்துவிட்டதால் அதில் இருந்து வரும் ஒலியின் அளவு குறைந்து வரும் 12ம் தேதி சுத்தமாக நின்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.