இலங்கை போர்க்குற்ற விசாரணையில் 'காமன்வெல்த் நீதிபதிகள்': ஐ.நா.வில் யு.எஸ். புதிய தீர்மானம் தாக்கல்!
ஜெனீவா: இலங்கை நடத்தும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்குப் பதிலாக காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்ற வாசகத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா புதிய தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது கூட்டத்தில் மனித உரிமைகள் ஆணையர் , 19 பக்க அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றிருந்தது; மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருந்தன; இதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட ஒரு கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
இந்த நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா ஒருவரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்திருந்தது. அதில் இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதற்கு இலங்கை மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தரப்புடன் இலங்கை குழு தொடர்ச்சியாக விவாதங்களை நடத்தியது. இறுதியாக திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா இன்று தாக்கல் செய்துள்ளது.
அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்த கலப்பு நீதிமன்றம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் இலங்கை அரசாங்கமே உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும்; இந்த விசாரணையில் காமன்வெல்த் நாடுகள் மற்றும் சர்வதேச நீதிபதிகள் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு 30-ந் தேதியன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.