இந்திய வம்சாவளி மாணவிக்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு- நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு!
நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு 2,25,000 டாலர்கள் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரத்து 750 ரூபாய் ஆகும்.
இந்தியாவைச் சேர்ந்த கிரித்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.
அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில் காவல்துறை அவரை கைது செய்து ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்திருந்தது. பள்ளியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த கிரித்திகா தன்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் டாலர்கள் கோரியிருந்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணைகள் முடிவடைந்து தற்போது தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கோயெல்டல் கிரித்திகாவிற்கு நஷ்ட ஈடாக 2,25,000 டாலர் தொகையினை நியூயார்க் நகர நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.