நியூயார்க் அருகே ஜீப் மீது மோதிய ரயில் தீப்பிடித்து எரிந்தது! பயணிகள் 5 பேர் உட்பட 6 பேர் பலி!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் அருகே ஜீப் மீது ரயில் மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நியூயார்க்கில் இருந்து சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வல்கல்லா என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று நியூயார்க் சிட்டி மெட்ரோ வடக்கு ரயில்ரோடு செய்தித் தொடர்பாளர் ஆரோன் டோனோவன் தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களில் 5 பேர் ரயிலில் பயணித்தவர்களாகும். மற்றொருவர் ஜீப்பை ஓட்டிச் சென்ற பெண்மணி. அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நடந்துள்ளது.
ரயில் தண்டவாளத்தை ஜீப் கடக்க முற்பட்ட அதே நேரத்தில், சாலையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே (தானியங்கி) கேட் வந்து மூடியுள்ளது. ஜீப்பின் மேல் கேட் விழுந்ததால் அதிர்ச்சியடைந்த ஜீப்பை ஓட்டிச் சென்ற பெண் கீழே இறங்கி ஜீப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்துள்ளார். அதன்பிறகு ஜீப்பை கிளப்பிக் கொண்டு தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார். ஆனால் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை.
எனவே ஜீப் மீது ரயில் மோதி அதை தரதரவென இழுத்துச் சென்றது. இதில் ரயிலின் முன்பகுதியில் தீ பிடித்தது. இவ்விபத்தில் ரயிலில் பயணித்த 5 பேரும், ஜீப் ஓட்டிய பெண்ணும் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். ரயிலில் இருந்த பயணிகள், இதை பார்த்ததும் அவசரமாக கீழே இறங்கி ஓடினர்.
சுமார் 400 பயணிகள் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டு பஸ்கள் மூலம் சேர வேண்டிய பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.