நியூசிலாந்தில் மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா... 3 நாட்கள் முழு ஊடரங்கை அறிவித்த ஜெசிந்தா ஆர்டர்ன்
வெலிங்டன்: ஆக்லாந்து நகரில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊடரங்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலும் தற்போதும்கூட கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இருப்பினும், குட்டி தீவு நாடாக நியூசிலாந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கொரோனா பரவலை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியது.
இதன் காரணமாக நியூசிலாந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது. கடைகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட தொடங்கின. திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்கில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு நியூசிலாந்து உள்ளூர் பரவல் மூலம் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. ஆனால், இப்போது ஆக்லாந்து நகரில் வசிக்கும் ஒரு தம்பதிக்கும் அவர்களது மகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆக்லாந்து நகருக்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு
இவர்கள் மூவரும் கடந்த 15 நாட்களில் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை. அதாவது உள்ளூர் பரவல் காரணமாக இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு ஆக்லாந்து நகரில் முழு ஊடரங்கை அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார். வைரஸ் பரவல் மீண்டும் பரவ தொடங்குவதைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கபப்டடுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
அதன்படி ஆக்லாந்து நகரிலுள்ள பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளில் பங்கேற்ற மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடி பாடங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
நியூசிலாந்து நாட்டில் தற்போது வரை 2,330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 25 பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். அதேபோல நியூசிலாந்து நாட்டில் பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை, அந்நாட்டு அரசு வரும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.