ஆரம்பத்திலேயே விழித்துக் கொண்ட நியூசிலாந்து.. கொரோனா போரில் வெற்றி.. குவியும் பாராட்டு!
கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடாக திகழ்கிறது நியூசிலாந்து.
வெலிங்டன்: மிக விரைவாகவும், கடுமையாகவும் செயல்பட்டதன் காரணமாக கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடாக பாராட்டப்பட்டு வருகிறது நியூசிலாந்து. உலக நாடுகள் எல்லாம் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் போராடிக்கொண்டிருக்க, நியூசிலாந்தில் மட்டும் அது எப்படி சாத்தியப்பட்டது என்பதை தெரிந்துகொள்வோம்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி மனித குலத்துக்கே மிகப் பெரிய சவாலாக மாறி இருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், மெக்சிகோ, ரஷ்யா, பெரு, சிலி, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது.
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது அமெரிக்கா. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசிலும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. இந்த நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
டிரம்ப் எடுத்த ஒரு முடிவு.. கலக்கத்தில் ஹு.. மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தலைவர்.. பரபரப்பு!
ஆச்சர்யம் ஆனால் உண்மை
உலகமே இப்படி கொரோனாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க, அதை அசால்டாக அடித்து துரத்தி இருக்கிறது நியூசிலாந்து என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அது தான் உண்மை. கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளதாக அந்நாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது நியூசிலாந்து மட்டும் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தியது என்பது பலருக்கும் ஆச்சரியம் தான்.
முதல் நோயாளி
கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தார். சீனாவுக்கு வெளியே கொரோனாவால் நிகழும் முதல் மரணம் இது தான். இந்த செய்தியை கேட்டதுமே விழித்துக்கொள்கிறது நியூசிலாந்து. நோயின் வீரியத்தை முழுமையாக உணர்ந்த அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், உடனடியாக வெளிநாட்டினர் நியூசிலாந்துக்குள் நுழைய தடைவிதிக்கிறார்.
முழு ஊரடங்கு
ஆனால் கொரோனா அவரை விட வேகமாக செயல்பட்டு நியூசிலாந்துக்குள் நுழைந்துவிடுகிறது. சற்றும் தாமதிக்காத ஜெசிந்தா, தனது நாட்டின் எல்லைகளை மூடுகிறார். அடுத்தடுத்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. விதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மீண்டும் கொரோனா தொற்று
இதன் விளைவாக நியூசிலாந்து இன்று கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடாக திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நியூசிலாந்து தன்னை கொரோனா இல்லாத நாடாக அறிவித்தது. ஆனால் அடுத்த சில தினங்களில், இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்கு துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அனுமதி பெற்று வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் இந்தியாவில் இருந்து நியூசிலாந்து சென்ற ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
பரபரப்பு
அவர்கள் அனைவரையும் நியூசிலாந்து அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது. கொரோனா தொற்று உள்ள இந்திய இளைஞர், தனிமை முகாமில் இருந்து வெளியேறி ஊர்சுற்றி பரபரப்பை கிளப்பினார். அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.
குறைவான பாதிப்பு
இப்படியாக நியூசிலாந்து கொரோனாவுக்கு எதிரான தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. இதன் விளைவாக நியூசிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1542 தான். அதில் 1497 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22- ஐ தாண்டவில்லை.
பாராட்டு
நியூசிலாந்து ஒரு சிறிய நாடு. அதன் மொத்த மக்கள் தொகையே 50 லட்சத்தை தாண்டவில்லை. எனவே தான் அந்நாட்டால் மிக எளிதாக கொரோனாவை வெல்ல முடிந்தது என்ற கருத்தும் இருக்கிறது. ஆனால் நியூசிலாந்தில் வருவாய் என்பது பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பித் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது நாட்டின் எல்லைகளை மூடி, துரிதமான நடவடிக்கைகளை எடுத்த நியூசிலாந்து நாட்டு அரசை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது.