காதலருடன் சாப்பிட வந்த நியூசி. பிரதமர்.. ஸாரி சீட் ஃபுல் ஆயிருச்சு.. திருப்பி அனுப்பிய ஹோட்டல்!
வெலிங்டன்: காபி கிளப்புக்கு தனது காதலருடன் வந்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு உள்ளே உட்கார சீட் இல்லை என்று கூறி ஹோட்டல் நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இருப்பினும் பின்னர் இடம் கிடைத்ததைத் தொடர்ந்து ஜெசிந்தா தனது காதலருடன் உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பினார்.
Recommended Video
உலகின் பிற நாடுகளைப் போலவே நியூசிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 1498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதில் 1428 பேர் குணமாகி விட்டனர். 21 பேர் மரணமடைந்துள்ளனர். 49 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நன்றாக கட்டுக்குள் வந்து விட்டதால் அந்த நாட்டில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. அதன்படி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் எதையும் மேற்கொள்ளலாம். முகமூடி கட்டாயம். அதேபோல சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சாலைகளில் நடக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்.. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய அதிரடி திட்டம்
தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்
இந்த லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து மக்கள் நிம்மதியாக வெளிக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். சமூக இடைவெளியையும் அரசு விதித்துள்ள விதிமுறைகளையும் கடைப்படித்தபடி தொழில்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஹோட்டல்களில் இத்தனை பேர்தான் அமர்ந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதை ஹோட்டல்கள் கடைப்பிடித்து வருகின்றன.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா
இந்த நிலையில்தான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது காதலர் கிளார்க் கேபோர்டுடன் வெலிங்டனில் உள்ள ரெஸ்டாரென்ட்டுக்கு சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது ஹோட்டலில் சீட்கள் நிரம்பி விட்டிருந்தன. இதனால் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகம் பிரதமருக்கு கூறியது. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் பின்னர் அவர்களுக்கு சீட் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு அவர்கள் அமர வைக்கப்பட்டனர்.
ஊழியர்களுடன் சந்தோஷ பேச்சு
கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஹோட்டலில் இருவரும் செலவிட்டனர். அங்கிருந்து திரும்புவதற்கு முன்பு ஹோட்டல் ஊழியர்களுடன் சாதாரண முறையில் பேசிக் கொண்டிருந்தார் ஜெசிந்தா. லாக்டவுன் சமயத்தில் கிடைத்த அனுபவங்கள் உள்ளிட்டவற்றை அவர் கேட்டறிந்தார். அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பிப் போனார். இந்த சம்பவம் குறித்து அந்த ஹோட்டலில் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் டிவிட்டரில் போட்டுள்ளார்.
ஹோட்டல் ஆலிவ்
அதில் ஓ காட்.. ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆலிவ் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தார். ஆனால் இடமில்லாத காரணத்தால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறியிருந்தார். பின்னர் இன்னொரு டிவீட்டில் நல்ல வேளையாக தற்போது அவர்களுக்கு இடம் கிடைத்து விட்டது. சாப்பிட்டு விட்டு பில் கூட கட்டினார்கள் என்று கூறியிருந்தார். அதற்கு கேபோர்ட் பதில் கொடுத்துள்ளார். அதில், இந்தக் குழப்பத்துக்கு நான்தான் காரணம். முன்கூட்டியே புக் செய்ய தவறி விட்டேன். சரியான முறையில் இதை நான் கையாளவில்லை. ஆனால் அவர்களுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார் கேபோர்ட்.
எதையும் பிளான் பண்ணனும்
எல்லா ஊரிலும் ஆண்கள் இப்படித்தான் போல.. காதலியுடன் வெளியே செல்லும்போது பக்காவாக திட்டமிடுவது கிடையாது.. ஏனோதானோதான்.. என்ன இருந்தாலும் நியூசிலாந்து நாட்டை பாராட்டியாக வேண்டும். பிரதமராகவே இருந்தாலும் கூட சீட் இல்லாட்டி இல்லைன்னு சொல்லும் தைரியம், பக்குவம் வேறு யாருக்கு வரும்.. குறிப்பாக நம்ம ஊரில் யாராவது விஐபி வந்தால் இப்படி சொல்லி திருப்ப அனுப்ப முடியும்?.. புல்டோசரை வச்சு இடிச்சுப்புட மாட்டாங்க!