குட்டி தேவதை நீவ்.. ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று வரலாறு படைத்த "நியூசிலாந்தின் முதல் குழந்தை"
நியூசிலாந்து பிரதமர் 3 மாத குழந்தையுடன் ஐநா கூட்டத்தில் பங்கேற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
நியூயார்க்: நியூசிலாந்து பிரதமர், தன்னுடைய 3 மாத கைக்குழந்தையுடன் ஐ.நா.கூட்டத்தில் கலந்து கொண்டு அசத்தி உள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா அர்டென். இவர், கிளார்க் கேஃபோர்ட் என்கிற டிவி ஆங்கரை திருமணம் செய்துள்ளார். தற்போது ஜெசிந்தாவுக்கு 38 வயதாகிறது.
பெண் குழந்தை நீவ்
கடந்த ஜூன் மாதம்தான் இவருக்கு ஒரு அழகான பெண்குழந்தை பிறந்தது. ஒரு நாட்டின் பிரதமராக பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றது இதற்கு முன்பு மறைந்த பெனாசீர் பூட்டோ தான். தற்போது ஜெசிந்தா இரண்டாவது பிரதமர் ஆவார். ஜெசிந்தா தன் குழந்தைக்கு நீவ் என்று பெயரிட்டுள்ளார்.
அடையாள அட்டை
இந்நிலையில் நியூயார்க் கில் உள்ள ஐ.நா. கூட்டத்தில் நெல்சன் மண்டேலா அமைதி மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் ஜெசிந்தா கலந்து கொண்டார். ஆனால் அவருடன் குட்டி ஜெசிந்தாவான 3 மாத குழந்தையும் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கூடவே பிரதமரின் கணவரும் வந்திருந்தார். இதனால் அவருக்கும் குழந்தைக்கும் ஐ.நா.சபை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நியூசிலாந்தின் முதல் குழந்தை
இதன்மூலம் ஐ.நா. மேடையில் கலந்துகொண்ட "நியூசிலாந்தின் முதல் குழந்தை" என்ற பெருமை இந்த குட்டி தேவதைக்கு கிடைத்துள்ளது. ஐநாவில் கூட்டம் முடிகிற வரைக்கும், ஜெசிந்தா அதன் குழந்தையை அணைத்துக் கொண்டே இருந்தார். அவ்வப்போது முத்தமிட்டுக் கொண்டும் இருந்தார். மாநாட்டில் அவர் பேசும்போதுகூட குழந்தையை கையில் வைத்துக் கொண்டுதான் பேசினார்.
குவியும் பாராட்டுக்கள்
மாநாட்டில் கலந்துகொண்ட எல்லோருமே இதனை புன்முறுவலுடன், மகிழ்ச்சியுடன், வியப்புடன் கவனித்துக் கொண்டே இருந்தனர். தாய் ஆனாலும், தன் தாய் நாட்டையும் ஜெசிந்தா சிறப்பாகவே கவனித்து வரும் ஜெசிந்தாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அத்துடன் நீவ் மிக மிக இளம் வயதிலேயே நாட்டுக்காகத் தூதராக மாறிவிட்டார் என்று குழந்தையை கொஞ்சி பலரும் ட்வீட் செய்து வருகிறார்கள்.