புத்தம் புது பூமி வேண்டும்.. இதோ எடுத்துக்கங்க ஒன்னுக்கு மூனா!
வாஷிங்டன்: நமது பூமியைப் போலவே காட்சி தரும் 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு நம்மைப் போலவே உயிரினங்கள் வாழலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இதுகுறித்த ஆய்வு தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த கிரகங்கள் ஒரு பிரகாசம் குறைந்த நட்சத்திரத்தை (அதன் சூரியன்) சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த புதிய கிரகங்களும், அவற்றின் சூரியனும், நமது பூமியிலிருந்து 40 ஒளியாண்டுகள் தூரத்தில்தான் உள்ளன. ஒரு ஒளி ஆண்டு என்பதை கிலோமீட்டரில் சொல்வதானால், 6 லட்சம் கோடி கிலோமீட்டர் ஆகும்.
பெல்ஜியத்தில் உள்ள லீக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு இந்தக் கிரகங்களை கண்டுபிடித்து ஆய்வு செய்து வருகிறது.
நம்பிக்கை...
இதுகுறித்து அக்குழுவின் தலைவரான மைக்கேல் கில்லன் கூறுகையில், "பூமிக்கு வெளியே உள்ள உயிர்கள் குறித்த ஆய்வை நாம் இங்கிருந்தே தொடங்கலாம். அந்த அளவுக்கு இந்த கிரகங்கள் நம்பிக்கை தரும் வகையில் உள்ளன.
மனிதர்கள் வாழலாம்...
இந்த புதிய சூரியக் குடும்பம் நமது குடும்பத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அளவிலும் வெப்ப நிலையிலும் பூமி மற்றும் வெள்ளி போன்று உள்ளது. பலகட்ட ஆய்வுக்குப் பின் இந்த 3 கிரகங்களும் மனிதர்கள் வாழத் தகுந்த கிரகங்கள் என முடிவுக்கு வந்துள்ளோம்" என்றார் அவர்.
டிராப்சிட் தொலைநோக்கி...
ஐரோப்பாவின் டிராப்சிட் தொலைநோக்கி மூலமாக இந்த புதிய கிரகங்களை கண்டுபிடித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தொலைநோக்கியானது சிலி நாட்டில் நிறுவப்பட்டுள்ளது.
பிரகாசம் குறைந்த சூரியன்...
புதிய கிரகங்கள் சுற்றி வரும் சூரியனானது நமது சூரியனை விட பிரகாசம் குறைந்தது. அதாவது அழிவு நிலையில் அந்த சூரியன் உள்ளது. நமது சூரியனைவிட 8 சதவீதம் சிறியதாகும்.
2000 கிரகங்கள்...
நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ரக கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த கிரகத்திலும் உயிரினங்கள் வாழும் சூழல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.