ஹாலிவுட் படத்தில் வந்த பஸ்ஸை பார்க்க ஆசைப்பட்ட புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
நியூயார்க்: இன் டூ தி வைல்டு ஹாலிவுட் படத்தில் வந்த பஸ்ஸை பார்க்கும் ஆசையில் ஆற்றை கடந்த பெலராஸ் நாட்டைச் சேர்ந்த புதுமணப்பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த மலையேற்ற வீரர் கிறிஸ்டோபர் மெக்கேண்ட்லஸ். இவருக்கு நகர வாழ்க்கை வாழ சலிப்பு தட்டியது. இதனால் இவர் வித்தியாசமான வாழ்க்கையை தேடி, கடந்த 1992-ம் ஆண்டு அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் உள்ள டெனாலி பகுதியில் காட்டுக்குள் சுற்றுலா சென்றார்.
ஆனால் சில நாள் மட்டுமே அந்த வாழ்க்கை அவருக்கு இனித்தது. இதனால் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டார். ஆனால் ஊருக்கு திரும்பும் வழியில் தெக்லானிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவர் மீண்டும் காட்டுக்குள் திரும்பினார். அங்கு அவர் உடைந்த பஸ் ஒன்றில், உணவின்றி 3 மாதங்களுக்கு மேலாக வசித்தார். பின்னர் இறந்து போனார்..
உலக அளவில் பிரபலம்
இதையடுத்து கிறிஸ்டோபர் வாழ்க்கையை தழுவி கடந்த 2007-ம் ஆண்டு 'இன் டூ த வைல்டு' என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் கிறிஸ்டோபர் வாழ்ந்த காடும், அவர் வாழ்ந்த உடைந்த பேருந்தும் உலக அளவில் பிரபலம் ஆனது.
தெக்லானிகா ஆறு
இதனால் அமெரிக்கா வரும் சுற்றுலா பயணிகள் அலஸ்கா மாகாணத்துக்கு சென்று தெக்லானிகா ஆற்றை கடந்து, கிறிஸ்டோபர் வாழ்ந்த பஸ்சை பார்த்து செல்கிறார்கள்.
அலாஸ்கா மாகாணம்
இப்படித்தான் அமெரிக்காவுக்கு புதுமண தம்பதியான வெராமிக்கா மற்றும அவரது கணவர் பியோட்டர் மார்க்சிலவ் ஆகியோர் வந்தனர். அவர்கள் கிறிஸ்டோபர் வாழ்ந்த பஸ்சை பார்க்க ஆசைப்பட்டு அலாஸ்கா மாகாணம் டெனாலிக்கு சென்றனர்.
வெள்ளத்தில் மூழ்கினார்.
அங்கு தெக்லானிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் பஸ்சை பார்த்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இருவரும் ஆற்று வெள்ளத்தில் கயிறு மூலம் கரையை கடக்க முயன்றனர். ஆனால் வெராமிக்காவின் கை நழுவியதால் ஆற்று வெள்ளத்தில் மூழ்கினார். அவரால் எதிர்நீச்சல் அடிக்க முடியாததால் பரிதாபமாக உயிரிழந்தார். ஹாலிவுட் பட பஸ்ஸை பார்க்க வந்து புதுமண பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.