நைஜீரியா அகதிகள் முகாமில் ராணுவ விமானம் தவறுதலாக குண்டு வீசியதில் 100 பேர் பலி
அபுஜா: நைஜீரியா நாட்டில் அகதிகள் முகாம் மீது ராணுவ ஜெட் விமானம் தவறுதலாக குண்டு வீசியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி விட்டன. "மேற்கத்திய நவீனக் கல்வி" போகோ ஹரம் இயக்கத்துக்கு மிகவும் வெறுப்பைத் தரும் வார்த்தைகள்.
இஸ்லாமிய வழி கற்பித்தல் தான் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும் (போகோ ஹராம் என்ற வார்த்தைகளுக்கான அர்த்தமே 'மேற்கத்தியக் கல்விக்குத் தடை' என்பதுதான்.) என்ற கொள்கைக்கு இடைஞ்சலாக இருந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து வருகிறது இந்த அமைப்பு.
இந்த போகோ ஹரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இந்தநிலையில் நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது ராணுவ விமானப் படையை சேர்ந்த ஜெட் விமானம் தவறுதலாக குண்டு வீச்சை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் லக்கி இரப்பார் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து குண்டு வீச்சு நடந்த இடத்தில் அரசு தரப்பினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.