எபோலா பயம்... யூத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியது நைஜீரியா
நாஞ்சிங்: எபோலா நோய் அச்சுறுத்தல் காரணமாக யூத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நைஜீரியா விலகியுள்ளது.
பயங்கர ஆட்கொல்லி நோயான எபோலா ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், எபோலோ நோய்க்கு எதிராக சர்வதேச சுகாதார அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளது. எனவே, மற்ற நாடுகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக எபோலா நோய் பரவியுள்ள சியரா லியோன், லைபீரியா ஆகிய நாடுகள் சீனாவில் நடைபெற உள்ள யூத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகின. அந்த வரிசையில் தற்போது நைஜீரியாவும் இணைந்துள்ளது.
யூத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நைஜீரியா விலகியதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் உறுதி செய்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக தாமஸ் பாக் மேலும் கூறுகையில், "எபோலா நோய் தாக்கியுள்ள இந்த கடினமான சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இருந்து சியரா லியோன் மற்றும் லைபீரியா நாடுகள் விலகியதை மதிக்கிறோம். இதேபோல் நைஜீரியாவும் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் அனுப்பியிருக்கிறது. இது வீரர்களுக்கு மிகவும் கடினமானது என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.