நைஜீரியா: பள்ளியை சூறையாடி 59 மாணவர்களைக் கொன்ற தீவிரவாதிகள்
டமடுரு - நைஜீரியா: நைஜீரியாவில் பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் உறங்கிக் கொண்டிருந்த 59 மாணவர்களை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
நைஜீரியாவின் போராளிகள் இயக்கமான போகோ ஹாரம் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும், அந்நாட்டின் வடக்குப் பகுதியில் ஒரு முஸ்லிம் அரசை உருவாக்குவதற்காக இந்த இயக்கம் கடந்த நான்கரை வருடங்களாகப் போராடி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேற்கத்திய கல்விக்குத் தடை என்ற கொள்கையுடன் செயல்படும் போகோ ஹாரம் இயக்கத்தினர் நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பல பள்ளிகளிலும் தொடர்ந்து தங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
தீவிரவாதிகள் யோபே மாநிலத்தின் தலைநகரான டமடுருவிலிருந்து கிட்டத்தட்ட 60 கி.மீ தொலைவில் உள்ள புனியடி நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.
59 மாணவர்கள் கொலை
கூட்டாட்சி அரசுக் கல்லூரியில் நடைபெற்றுவரும் இந்தப் பள்ளியில் 11 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் தங்கிப் படித்து வந்தனர். அதிகாலை 2 மணியளவில் பள்ளி வளாகத்தினுள் நுழைந்த போராளிகள் அங்குள்ள தங்கும் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 59 மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாக யோபே பகுதியின் ராணுவ செய்தித் தொடர்பாளரான லாசரஸ் எலி தகவல் தெரிவித்துள்ளார்.
40 கல்லூரி மாணவர்கள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குஜ்பா மாகாணத்தின் யோபே நகரில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் நடு இரவில் புகுந்த இந்தத் தீவிரவாதிகள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களைச் சுட்டதில் 40 பேர் பலியாகினர்.
ராணுவக் கிளர்ச்சி
மூன்று வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான யோபேயில்தான் கடந்த மே மாதம் ராணுவம் கிளர்ச்சியாளர்களை அடக்க அரசு பெரும் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
1000 பேர் படுகெலை
அவசர நிலையை முன்னிட்டு கூடுதலான ராணுவம் அங்கு நிலை நிறுத்தப்பட்டபோதும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர்.