நைஜீரியாவில் அப்பாவிகளை கொல்ல மறுத்த தற்கொலைப்படை பெண் தீவிரவாதி
அபுஜா: ஹைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இளம்பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு அங்கியை தூக்கி வீசிவிட்டு மக்களை கொல்ல மறுத்துள்ளார்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ள திக்வா அகதிகள் முகாமிற்கு சென்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்துமாறு போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 3 இளம்பெண்களை அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் ஒரு பெண் அப்பாவி மக்களை கொல்ல விருப்பம் இல்லாமல் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு அங்கியை கழற்றி வீசிவிட்டு ஓடிவிட்டார். அவர் ராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்து உண்மையை தெரிவித்தார்.
இதற்கிடையே மற்ற இரண்டு பெண்களும் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் முகாமில் இருந்த 58 பேர் பலியாகினர். தப்பியோடிய பெண் தான் குண்டு அங்கியை வீசிய இடத்திற்கு வீரர்களை அழைத்து வந்து காட்டினார்.
விசாரணையில் அவர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார். மேலும் தீவிரவாதிகள் எங்கு எல்லாம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.