நான் சஹாரா ஹோட்டல்களை வாங்கலையே.. புரூனே சுல்தான் திடீர் பல்டி!
வாஷிங்டன்: ரூ. 14,170 கோடி கொடுத்து சஹாரா நிறுவனத்தின் அமெரிக்க ஹோட்டல்களை புரூனே சுல்தான் வாங்கப் போவதாக வெளியான தகவலை சுல்தான் தற்போது மறுத்து விட்டார். இதனால் சஹாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராய் சிக்கலில் மாட்டியுள்ளார்.
திஹார் சிறையை விட்டு வெளியே வர அவருக்கு ரூ. 15,000 கோடி தேவைப்படுகிறது. இதற்காக தனது நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள 3 ஹோட்டல்களை விற்க அவர் முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் புரூனே சுல்தான், ரூ. 14,170கோடிக்கு சுப்ரதா வின் இரு ஹோட்டல்களை வாங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அதை புரூனே சுல்தான் தரப்பு மறுத்துள்ளது.
அதெல்லாம் இல்லை
இதுகுறித்து புரூனே சுல்தானின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அப்படி எந்தத் திட்டமும் இல்லை. அப்படி எதுவும் நடைபெறவில்லை.
அரசும் வாங்கவில்லை, சுல்தானும் வாங்கவில்லை
புரூனே அரசு சார்பிலோ அல்லது சுல்தான் சார்பிலோ இந்த வாங்கும் நடவடிக்கையில் யாரும் இறங்கவில்லை, ஈடுபடவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்
புரூனே சுல்தான் மிகப் பெரிய பணக்காரர். மிக மிக அதிக அளவிலான சொத்துக்களுடன் இருந்து வருபவர். மிக மோசமான சர்வாதிகாரி என்ற பெயரையும் பெற்றிருப்பவர். இவர் சஹாரா சொத்துக்களை வாங்கப் போவதாக தகவல்கள் வெளியானபோது பல மனித உரிமை அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
நியூயார்க்கில் எதிர்ப்பு
மேலும் நியூயார்க் ஹோட்டல்களை புரூனே சுல்தான் வாங்க அனுமதிக்க மாட்டோம் என்று அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கலிபோர்னியாவில் ஹோட்டல் இருக்கு
ஏற்கனவே புரூனே சுல்தானுக்கு கலிபோர்னியாவில் பெவர்லி ஹில் என்ற ஹோட்டல் உள்ளது. அங்கு அடிக்கடி போராட்டங்கள் நடப்பது சர்வ சாதாரணமானது.
சஹாரா நிலைமை சிக்கல்
புரூனே சுல்தான் ஹோட்டல்களை வாங்கவில்லை என்று மறுத்து விட்டதால் சஹாராவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. சுப்ரதாவும் வெளியே வருவது தடைபட்டுள்ளது.