மோடி-நவாஸ் ஷெரீஃப் இடையே அதிகாரப்பூர்வ பேச்சு நடைபெறாது - இந்திய வெளியுறவுத்துறை
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெஃரீப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். "ஐ.நா.சபையின் நீடித்த வளர்ச்சிக்கான செயல் திட்டம் 2030" குறித்து கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார். அதே போல் பாகிஸ்தான் பிரதர் நவாஸ் ஷெரீஃப் அமெரிக்காவுக்கு செல்கிறார்.
மோடியும், ஷெரீஃப்பும் ஒரே ஹோட்டலில்தான் தங்கவுள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், நவாஸ் ஷெரீஃப்புடன் ஒரே ஹோட்டலில் தங்கும் மோடி, அவரைச் சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்க்க மாட்டார். இருவரும் சந்திக்க நேர்ந்தால் மரியாதை நிமித்தமாக கைகுலுக்கிக் கொள்வார்கள்.
அதேவேளையில், இருவருக்கும் இடையே அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறாது என்று தெரிவித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. உயர்நிலைக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீஃப் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து 30ஆம் தேதி நடைபெறும் பொது சபைக் கூட்டத்தில் ஷெரீஃப் பங்கேற்றுப் பேச உள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது இரு நாடுகளும் கருத்து மோதல் ஏற்படும் வகையில் பேச வேண்டாம் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக அந்த பாகிஸ்தான் பத்திரிகையொன்றில் அண்மையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.நா.சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது காஷ்மீர் பிரச்னையை எழுப்ப பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டுத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில், இந்தப் பிரச்னையை நவாஸ் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், காஷ்மீர் விவகாரத்துக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.