ஓமனில் உண்ண உணவு இன்றி, தங்க இடமின்றி சிக்கி தவிக்கும் தமிழர்கள் - ஏமாற்றிய ஏஜென்ட்
ஓமன் நாட்டுக்காக வேலைக்கு சென்ற தமிழர்கள் உண்ண உணவின்றி தங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
ஓமன்: தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்சி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர் பணிக்காக ஓமன் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கே சம்பளம் கிடைக்காமல் நான்கு மாதங்களாக உண்ண உணவின்றி, தவித்து வருவதாக வாட்ஸ் அப் மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஏஜெண்ட் மூலமாக ஓமன் நாட்டுக்கு சென்ற இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். நாகராஜன் என்பவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
கடினமான வேலைகளை கொடுத்து சம்பளம் தராமல் ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்தும் அவர்கள் நிறுவனத்திற்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர் என்று புகார் கூறியுள்ளனர்.
கடந்த 4 மாதங்களாக உண்ண உணவின்றியும், தங்க இடமின்றியும் தவிப்பதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர். தங்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.