தயவு செய்து பழைய துணிகளை அனுப்பாதீர்கள்: இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள்
காத்மாண்டு: நிவாரணப் பொருட்களுடன் பழைய துணிகளை அனுப்பி வைக்க வேண்டாம் என்று நேபாள அரசு இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது. போதிய உணவு, தண்ணீர் இன்றி மக்கள் அரசு மீது கோபத்தில் உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களை சோதனை செய்கையில் அதில் சில சாக்குப் பைகள் இருந்துள்ளன. அதில் ஆட்சேபனைக்குரிய பொருட்கள் இருந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பழைய ஆடைகள் இருந்ததை பார்த்த நேபாள அதிகாரிகள் அதை ஏற்க மறுத்ததுடன் சாப்பிட்ட தட்டில் இருக்கும் மிச்சத்தை அளிக்க வேண்டாம் என்று இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில்,
நேபாள அதிகாரிகள் பழைய துணிகளை வேண்டாம் என்று கூறியதுடன் தட்டில் மிச்சம் இருந்ததை கொடுக்காதீர்கள் என்று கூறியது வருத்தம் அளிக்கிறது என்றனர்.
இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் தான் பழைய ஆடைகள் இருந்துள்ளன. இந்தியாவில் இருந்து ரயில் மூலமாக இதுவரை 171 டன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.