இந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறும் நிலையில், அமெரிக்கா நடத்தியுள்ள ஆய்வில் பாகிஸ்தானிடம் தாங்கள் வழங்கிய எண்ணிக்கையில்தான் எப்16 விமானங்கள் இருப்பதும், ஒன்றுமே குறையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
புல்வாமா தாக்குதலையடுத்து பிப்ரவரி 26ம் தேதி இந்திய விமானப்படையின் மிராஜ் வகை நவீன விமானங்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, குண்டு வீசி தாக்கி தீவிரவாத முகாம்களை அழித்தன.
இதனால் கோபமடைந்த பாகிஸ்தான், பிப்ரவரி 27ம் தேதி, காஷ்மீர் எல்லையில் தனது போர் விமானங்களை இந்திய வான் எல்லைக்குள் செலுத்தியது.
புலி ஃபைட்
அப்போது இந்திய போர் விமானங்கள் நடுவானில் எதிர்த்து சீறின. புலிகள் சண்டையிடுவதை போல இரு நாட்டு போர் விமானங்களும் எதிரும், புதிருமாக சீறியதாக வீடியோ ஆதாரங்கள் வெளியாகின. இந்த நிலையில், பாகிஸ்தான் விமானத்தை தனது மிக் - 21 வகை போர் விமானத்தில், விரட்டிச் சென்றார் அபிநந்தன்.
அபிநந்தன் மீட்பு
அப்போது, பாக். எல்லைக்குள் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன்பிறகு பேச்சுவார்த்தை மூலமாக, அபிநந்தனை பத்திரமாக மீட்டது இந்திய அரசு. இதனிடையே அபிநந்தன், பாகிஸ்தானின் எப்16 விமானத்தை சுட்டு வீழ்த்திய பிறகுதான், தாக்குதலுக்கு இலக்கானதாக இந்தியா அறிவித்தது.
ஏவுகணை பாகங்கள்
எப் 16 விமானங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஏவுகணை உதிரிபாகங்கள் சிதறி கிடந்ததை ஆதாரமாக காண்பித்தது இந்திய ராணுவம். எப்16 விமானம், அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதாகும். இந்தியாவுக்கு எதிராக அதை பயன்படுத்த கூடாது என்பது அமெரிக்கா போட்ட நிபந்தனை. ஆனால், எப்16 விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும், அதை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவித்தது அமெரிக்காவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாயமாகவில்லை
இதையடுத்து தங்கள் நாட்டுக்கே வந்து எப் 16 விமானங்கள் எதுவும் மாயமாகவில்லை என்பதை உறுதி செய்யுமாறு, அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அழைப்புவிடுத்திருந்தது. இதையடுத்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 2 மூத்த அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு சென்று நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் எப் 16 விமானங்கள் எதுவுமே மாயமாகவில்லை என்று தெரியவந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த, 'பாஃரின் பாலிசி' என்ற இதழ், செய்தி வெளியிட்டுள்ளது.