விசா விவகாரம் எதிரொலி: இந்திய ஐஐடி மாணவர்களைப் புறக்கணிக்கும் அமெரிக்கா!
மும்பை: இந்திய ஐஐடிக்களில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள்தான் பெரும் சோகமாக காணப்படுகின்றனர். காரணம், அமெரிக்க நிறுவனங்கள் யாரும் வேலைக்கு ஆள் எடுக்க வராதது தான்.
விசா குழப்பம் எதிரொலியாகவே அமெரிக்க நிறுவனங்கள் இந்திய கேம்பஸ் இன்டர்வியூக்களை புறக்கணித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் கிளைகளைக் கொண்டிராத அமெரிக்க நிறுவனங்கள் எதுவுமே இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவுக்கு பதிவு செய்யவி்ல்லையாம். கடந்த சீசனில் பெருமளவில் சம்பளம் கொடுத்து இந்தியர்களை அள்ளிச் சென்ற டிவிட்டர் நிறுவனமும் இந்த முறை கேம்பஸுக்கு வரவில்லை என்பதால் மாணவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனங்கள் வராமல் போனதற்கு என்ன காரணம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அமெரிக்க விசா பிரச்சினை தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
65000 விசாக்கள்....
கடந்த ஆண்டு அமெரிக்காவில் பணிபுரிய தரப்பட்ட எச்1பி1 விசாக்களின் எண்ணிக்கை 65,000 ஆகும். இதில், பெரும்பாலானவை இந்தியாவின் பெரும் ஐடி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. இதனால் புதிதாக ஐஐடியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல முடியவில்லை.
சம்பளமில்லா வேலை....
இதனால் இவர்களில் பலருக்கு அமெரிக்காவில் வேலை தரப்படவில்லை. மாறாக இந்தியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் பணியாற்றுமாறும், ஒரு வருடத்திற்கு வேறு ஒரு நாட்டுக்குப் போய் வேலை பார்க்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அமெரிக்க நிறுவனங்கள் உஷார்..
இந் நிலையில், வேலைக்கு ஆளை எடுத்துவிட்டு அவர்களை அமெரிக்கா அழைத்துச் செல்ல விசா கிடைப்பதில் சிக்கல் உருவாவதால் இந்த முறை பல அமெரிக்க நிறுவனங்கள் ஐஐடிக்கள் பக்கம் வரவில்லை.
வேறு வாய்ப்புக்களைத் தேடி..
தாங்கள் இந்த மாதிரியான சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஐஐடி மாணவர்கள் பலர், இந்த முறை வேறு வாய்ப்புகளை தேட ஆரம்பித்து விட்டனராம்.
ஜப்பான் நிறுவனங்கள்....
அதே நேரத்தில் பாம்பே ஐஐடிக்கு கேம்பஸ் இன்டர்வியூவுக்கு இந்த முறை ஜப்பானைச் சேர்ந்த பல நிறுவனங்கள் வருகின்றனவாம். இந்த நிறுவனங்கள் அமெரிக்காவை முக்கிய களமாக கொண்டு இயங்கி வருபவை ஆகும். மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரீஸ், உஹுரு சாப்ட்வேர், சோனி ஜப்பான் ஆகியவை அவற்றில் சில.
மோசமான பொருளாதார நிலை...
அமெரிக்காவில் நிலவி வரும் மோசமான பொருளாதார நிலை காரணமாகவும் பல நிறுவனங்கள் வரவில்லை என்று சொல்கிறார்கள். மேலும் பலர் தங்களிடம் காலி பணியிடம் இல்லை என்று கூறுகிறார்களாம்.
எதிர்பார்ப்பு....
ஐஐடி சென்னையின் பிளேஸ்மென்ட் ஆலோசகர் பாபு விஸ்வநாதன் கூறுகையில், அமெரிக்கா விசா பெறுவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இருப்பினும் நிலைமை மாறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடைசி நேரத்தில் கூட அவர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
இந்திய கிளைகளுக்கு....
இருப்பினும் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவுக்கு, அமெரிக்காவின் பாக்கெட் ஜெம்ஸ், எபிக் சிஸ்டம்ஸ், ராக்கெட் பியூல் அன்ட் டவர் ரிசர்ச் ஆகியவை வருவதாக உறுதியளித்துள்ளனவாம். அதேபோல மைக்ரோசாப்ட், கூகுள், ஆரக்கிள் ஆகியவையும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இவை தங்களது இந்திய கிளைகளுக்கான ஆட்களையே தேர்வு செய்யும் என்று தெரிகிறது.