என்.எஸ்.ஜி.யில் இந்தியா, பாகிஸ்தானை உறுப்பினராக்க ஆதரவு இல்லை: சீனா
சியோல்: அணுசக்தி மூலப்பொருளை விநியோகிக்கும் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.யில் இந்தியா, பாகிஸ்தானை உறுப்பினராக்க ஆதரவு தரப்போவதில்லை என்று சீனா அறிவித்துள்ளது.
48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட என்.எஸ்.ஜி.யின் 2 நாள் கூட்டம் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டமைப்பில் சேர இந்தியா விண்ணப்பித்துள்ளது.
இந்தியாவை சேர்த்தால் தங்களையும் உறுப்பினராக்க வேண்டும் என்கிறது பாகிஸ்தான். இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால் சீனாவோ இந்தியாவை உறுப்பினராக சேர்க்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை; ஆகையால் விதிகளின்படி இந்தியாவை உறுப்பினராக சேர்க்கக் கூடாது என கூறி வருகிறது.
இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானும் கூட அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் உறுப்பினராக ஆதரவு தருவோம் எனவும் சீனா கூறியுள்ளது.