ஜப்பானிலும் ஒரு "சபரிமலை" .. கயிற்றில் ஏறி, கரடுமுரடான மலைகளை கடந்து செல்லும் ஆண்கள் கோயில்!
டோக்யோ: ஜப்பானில் உள்ள மவுண்ட் ஓமைனில் உள்ள ஆமினேசன் கோயிலுக்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை பார்க்கும் போது நம் கண் முன் சபரிமலை நிழலாடி செல்கிறது.
ஜப்பானில் மவுண்ட் ஓமைன் என்ற மலை உள்ளது. சுமார் 5,640 அடி உயரம் கொண்ட இந்த மலையில் யமபுஷி எனப்படும் ஏராளமான சித்தர்கள் வசித்து வருகின்றனர்.
ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள இந்த சாய் தளமான மலையில் ஏறுவதற்கு முன்னர் பக்தர்கள் ஒரு பிரார்த்தனை செய்கின்றனர். ஜப்பானில் இந்த மலை மிகவும் உயரமான மலையாக கருதப்படுகிறது. இங்கு தவத்தில் இருக்கும் யமபுஷி என்னும் சித்தர்கள் ஷூகெண்டோ என்ற ஜப்பானிய மதத்தை பின்பற்றியவர்கள்.
1300 ஆண்டுகள் மரபு
இந்த மதத்தினர் அல்லாது மற்ற மதத்தினரும் கடந்த 9-ஆவது நூற்றாண்டு முதல் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் சபரிமலையை போல் இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. இது குறித்த அறிவிப்பு பலகையும் அங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த 1300 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பாலின பாகுபாடு
மவுண்ட் பியூஜி உள்ளிட்ட ஜப்பானின் பல்வேறு மலைகளுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என 1872-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஜப்பான் அரசு உத்தரவிட்ட போதிலும் அந்த உத்தரவை மவுண்ட் ஓமைன் புறக்கணித்தது. இந்த மலைக்கு பெண்களை அனுமதிக்காததற்கு பாலின பாகுபாடு காரணம் அல்ல.
அசுத்தம்
பெண்கள் அங்கு அனுமதிக்கப்படாததற்கு காரணம் மரபு மட்டுமல்ல. அவர்களை அனுமதித்தால் பாலியல் உறவுகளுக்கு வழிவகுக்கும். ஷூகெண்டோ என்ற மதத்தினரின் புனித மலையாக கருதப்படும் இங்கு பெண்கள் மாதவிடாய் காலம் மற்றும் குழந்தை பேறால் அவர்களது ரத்தம் அசுத்தமானதாக உள்ளதாக கருதப்படுகிறது.
கயிறு கட்டி ஏறுவது
பெண்களை அனுமதித்ததால் அங்கு தவ நிலையில் உள்ள சித்தர்களின் தவம் சிதறடிக்கப்படும். இந்த மலையேற்றம் என்பது சாகசங்கள் நிறைந்தது. அவர்களின் தைரியத்துக்கு வைக்கப்படும் சோதனையாகும். இதற்காக 3 டெஸ்ட்கள் வைக்கப்படுகிறது. முதலில் 30 அடி உயர பாறை கயிறு கட்டி கொண்டு ஏறுவது ஆகும்.
சமாளிக்க முடியாது
இரண்டாவது 200 அடி உயர மலையை அடைவது. இங்கு தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்வது, மேலும் சமூக மற்றும் மத சட்டங்களை மதிப்பேன் என உறுதிமொழி எடுப்பது ஆகும். மூன்றாவது மலையை அடைய கூர்மையான கற்கள் வைக்கப்படும். அதன் மூலம் மட்டுமே ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு செல்ல முடியும். மிகக் கடிமையானது என்பதால் பக்தர்கள் கேட்டால் மட்டுமே அதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த கரடுமுரடான பாதைகளில் கரடி உள்ளிட்ட விலங்குகள் வரும். இவற்றையெல்லாம் சமாளிக்க பெண்களால் முடியாது. இன்று வரை ஏதேச்சையான உயிரிழப்புகள் நடந்த வண்ணம் இருப்பதால் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.