அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு: ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு இயக்கம் தேர்வு
ஸ்டாக்ஹோம்: 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு இயக்கத்துக்கு கிடைத்துள்ளது.
நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு தாலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் மாணவி மலாலா யூசுப்சாயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அவருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு இயக்கத்திற்கு கிடைத்துள்ளது. உலகில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க இந்த இயக்கம் கடந்த 1997ம் ஆண்டு துவங்கப்பட்டது. நெதர்லாந்தில் உள்ள ஹேக்கில் இருக்கும் இந்த இயக்கத்தின் அலுவலகத்தில் 500 பேர் பணியாற்றுகின்றனர்.
இந்த இயக்கம் சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிப்பதை மேற்பார்வையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.