புதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் - ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு
புற்று நோய் சிகிச்சைக்கு 'இம்யூன் செக் பாயிண்ட் தெரபி' (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த டசூகு ஹோஞ்சோ இந்த நோபல் பரிசை பெறுகிறார்கள்.
இவர்கள் உருவாக்கிய இம்யூன் செக் பாயிண்ட் தெரபி ஒரு புரட்சிகர புற்றுநோய் சிகிச்சை என நோபல் பரிசை வழங்கும் சுவீடிஷ் அகாடெமி கூறி உள்ளது.
வியக்கத்தக்க பலன்களை இந்த சிகிச்சை முறை தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அலிசன் மற்றும் க்யோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டசூகு ஹோஞ்சோ1.01 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த நோபல் பரிசு தொகையை பகிர்ந்து கொள்வார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்த டசூகு ஹோஞ்சோ, "என் ஆய்வை நான் தொடர விரும்புகிறேன். அப்போதுதான் எப்போதும் இல்லாத அளவுக்கு பல புற்றுநோயாளிகளை இந்த இம்யூன் செக் பாயிண்ட் தெரபி காக்கும் என்கிறார்.
"இந்த முறை மூலம் சிகிச்சைப் பெற்ற புற்றுநோய் நோயாளிகளை பார்ப்பது நெகிழ்வான ஒரு கெளரவம். அறிவியலின் சக்திக்கு அவர்கள்தாம் வாழும் உதாரணம்" என்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன்.
என்ன சிகிச்சை முறை அது?
நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புதான் நம்மை நோய் தாக்காமல் காக்கிறது. ஆனால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பு நம் சொந்த திசுக்களைத் தாக்காமல் தடுக்க அதற்குள்ளேயே சில விதிவிலக்கான ஏற்பாடுகள் உள்ளன.
இந்த இடைவெளியை பயன்படுத்தி, நோய் எதிர்ப்பு அமைப்பை ஏமாற்றி சில வகை புற்றுநோய்கள் நம் உடலைத் தாக்குகின்றன.
நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள இந்த கட்டுப்பாட்டினை தளர்த்தி நோய் எதிர்ப்பு செல்களையே புற்றுநோய் செல்கள் மீது தாக்குதல் தொடுக்கும்படி செய்வதற்கான வழிவகையை அலிசனும் ஹோஞ்சோ-வும் உருவாக்கியுள்ளனர்.
'இம்யூன் செக் பாயிண்ட் தெரபி' முறையை பின்பற்றி பிரிட்டன் சுகாதாரத்துறை தோல் புற்று நோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறது.
வியத்தகு நல் விளைவுகளை இந்த சிகிச்சை முறை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்றும் கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- காபி பிரியரா நீங்கள்? - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
- கையெழுத்திட்டது வேதாந்தா: தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்
- 'பழிவாங்கல்’ வேண்டாம்: பாலியல் குற்றச்சாட்டும், அதிபர் டிரம்ப் கருத்தும்
- 'அடுத்து நீ தான்’ - பேரழகிக்கு வந்த கொலை மிரட்டல்