வடகொரியா மிக ஆபத்தான செயலில் ஈடுபடுகிறது.. கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. ட்ரம்ப் எச்சரிக்கை!
வடகொரியா மிக ஆபத்தான செயலில் ஈடுபடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வார்சா: வடகொரியா மிக ஆபத்தான செயலில் ஈடுபடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் எவுகணை சோதனையை நடத்தி வருகிறது. அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும் வடகொரியாவுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி 930 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக ஆய்வு செய்தது. இதனை வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் நேரில் பார்வையிட்டார்.
கிம்மால் கொந்தளிப்பு
பின்னர் உரையாற்றிய அவர் இந்த ஏவுகணை ஆய்வுதான் அமெரிக்காவுக்காவுக்கான சுதந்திர தின பரிசு என நக்கலடித்தார். கிம்மின் இந்த பேச்சு அமெரிக்கர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாய்திறந்த ட்ரம்ப்
இந்நிலையில் வடகொரியாவின் திமிர்தனமான பேச்சு மற்றும் ஏவுகணை சோதனை குறித்து அதிபர் ட்ரம்ப் இன்று வாய்திறந்துள்ளார். சிறப்புக் கூட்டத்துக்காக போலந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
கடும் விளைவுகளை சந்திக்க..
அப்போது வடகொரியா மிக மிக ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுவருவதாக அவர் கூறினார். வடகொரியாவின் நடத்தை அவர்களுக்கு அவமானம்தான் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இதற்கான கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்கப் போகிறார்கள் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.
என்ன நடக்கப்போகுதோ..
வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப் வடகொரியாவின் நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை என சுசூகமாக கூறினார்.
அமெரிக்கா தயாராக உள்ளது
இதனிடையே கடந்த புதன் கிழமை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் பாதுகாக்க எங்கள் திறன்களை முழு அளவில் பயன்படுத்த தயாராக உள்ளோம் என்று கூறினார்.
உச்சத்தில் போர் பதற்றம்
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை மற்றும் நிலைப்பாட்டால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. அதேநேரத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.