'குழந்தை'சாமியின் இன்னொரு பயங்கரம்... ஊழல் புகாரில் வடகொரியா ராணுவ தளபதி சுட்டுக்கொலை
சியோல்: வடகொரியாவில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ராணுவ தளபதி அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வடகொரியா அதிபராக இருந்த கிம் ஜாங் இல் 2011-ம் ஆண்டு காலமானார். அதைத் தொடர்ந்து அவரது மகன் கிம் ஜாங் அன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார்.
கிம் ஜாங் அன் இளம் வயதாக இருந்தபோதும் மிக மோசமான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். அவர் பங்கேற்ற ராணுவ அணி வகுப்பில் தூங்கிய ராணுவ அமைச்சர் ஹயோன் யாங் சோல்லை விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் ராணுவ தளபதி ரி யாங் கில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார்; அரசியல் சதி செய்தார் எனக் கூறி மரண தண்டனை விதித்துள்ளார். இதன்படி ரியாங்கில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
வடகொரியா செயற்கைக்கோளை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியபோது நடந்த வெற்றி கொண்டாட்டங்களில் ரியாங்கில் காணவில்லை. இதனைத் தொடர்ந்துதான் அவர் ஊழல் புகாரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் வெளியே வந்துள்ளது.
வடகொரியாவின் இந்த அதிபயங்கர நடவடிக்கைகள் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.