பார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்
Recommended Video
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமெரிக்காவை விட, வட கொரியா அதிக சலுகைகளை சம்பாதித்ததாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வடகொரியா கொடுத்தது கொஞ்சம் ஆனால் பெற்றது மிக அதிகம்.
சிங்கப்பூருக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த வடகொரிய அதிபர் ஒரு ராக் ஸ்டார் போல நடத்தப்பட்டார். உலகிலேயே அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்ற வடகொரியா நாட்டின் சர்வாதிகார அதிபர் கிம் ஜாங் உன் என்பதை என்பதை அனைவரும் மறந்திருந்தனர்.
வடகொரியா அதிபர் சாலைகளில் செல்லும்போது சிங்கப்பூர்வாசிகள் அவரை நோக்கி செல்போனில் படமெடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.
பழைய ஒப்பந்தம்
வட கொரிய அதிபர் கிம்-ஐ தங்க வைத்து உபசரிக்க சிங்கப்பூர் பிரதமர் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளார். ஆனால் கிம்முக்கு உண்மையான ரிவார்ட் கிடைத்தது அமெரிக்கா அதிபருடனான ஐந்து மணி நேர சந்திப்பின் போது தான். இருநாட்டு தலைவர்களும் இந்த சந்திப்பின்போது கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம் ஏற்கனவே வடகொரியா தென் கொரியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை போலானதாக இருந்தது. வடகொரியா ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. தாங்கள் ஏற்கனவே போதிய அளவிற்கு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து விட்டதால் இனிமேல் அணு சோதனைகளை நடத்த மாட்டோம் என்று அப்போது தெரிவித்திருந்தது.
கூடுதலாக ஒரு ஏவுகணை தளம்
அமெரிக்க அதிபருடனான சந்திப்பின்போதும் இதையேதான் வடகொரியா கூறியுள்ளது ஏற்கனவே இரு ஏவுகணை தளங்களை மூடிவிட வடகொரியா இப்போது மேலும் ஒரு ஏவுகணை சோதனை தளத்தை மூட முன்வந்துள்ளது. அவ்வளவுதான். ஆனால் இதற்கு மாறாக தென் கொரியாவில் அமெரிக்கா நிறுத்தியுள்ள முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புகளை அது வாபஸ் பெற யோசித்து வருகிறது.
அமெரிக்காவுக்கே இழப்பு
"நமது ராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும், அவர்களை தாய் மண்ணிற்கு அனுப்ப வேண்டும்" என்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதேநேரம் வடகொரியா அதிபருடனான சந்திப்பின் போது அது குறித்து பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். "போர் விளையாட்டு நிறுத்தப்படும்" என்று ட்ரம்ப் பத்திரிகையாளர்கள் மத்தியில் அறிவித்துள்ளதன் நோக்கம், தென் கொரியாவில் இருந்து அமெரிக்க ராணுவத்தினரை திரும்பப் பெறுவது தான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்
சீனாவுக்கும், வட கொரியாவுக்கும்தான் நல்லது
இவ்வாறு அமெரிக்கா எடுத்துள்ள முடிவு வடகொரியாவுக்கும் அதற்குத் துணையாக உள்ள சீனாவிற்கும் மிகப் பெரிய நன்மையை விளைவிக்கக் கூடியது. ஆனால் அமெரிக்காவை நம்பி உள்ள தென் கொரியாவிற்கு இது தொல்லை தரக்கூடியது என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள். இத்தனை ராணுவத்தினர் தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுபட வில்லை என்றால் போர்க்காலங்களில் அவர்கள் எதிரி நாட்டினரை சந்திப்பது என்பது மிகவும் சிரமம் என்கிறார் அமெரிக்க பாதுகாப்பு வல்லுனர் டேவிட் மேக்ஸ்வெல்.
மனித உரிமைகள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான விவாதங்களும் ட்ரம்ப்-கிம் சந்திப்பின்போது அதிகாரப்பூர்வமாக இடம்பெறவில்லை. மனித உரிமை மீறல்களால் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் தலைவர்கள் ட்ரம்ப்பை தொடர்பு கொண்டு இது குறித்து பேச வலியுறுத்தியிருந்தனர் சுமார் 5 ஆயிரத்து 300 அமெரிக்க ராணுவ வீரர்கள் 1950 முதல் 53 ஆம் ஆண்டு வரையிலான காலத்தின் போது வடகொரியாவில் மாயமாகி இருந்தனர்.
ட்ரம்ப் உறுதி
இந்த நிலையில் மனித உரிமை மீறல் குறித்து விவாதித்ததாக டொனால்ட் ட்ரம்ப் பேட்டியின் போது தெரிவித்தார் இது குறித்து மேலும் விவாதிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் தென் கொரியா அதிபருடன் கிம் ஜோங் உன் நடத்திய சந்திப்பின் போது ஏற்படுத்தப்பட்ட அணுஆயுத ஒப்பந்தம் போன்ற ஒரு ஒப்பந்தம் தான் நேற்று அமெரிக்க அதிபர் முன்னிலையிலும் கையெழுத்தாகியுள்ளது.
பலே குழந்தை சாமி
இதுவரை வடகொரியா பெரிய மதிப்பு அளிக்காத நிலையில் புதிய ஒப்பந்தத்தின் கதி என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது
வட கொரியா எதையும் இழக்காத நிலையில், அமெரிக்காவோ உச்சிமாநாட்டில் தனது அதிபரை பங்கேற்க வைத்துள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறு நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து, முஷ்டியை முறுக்கி, அதன் மூலம் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள முடியும் என்ற முன் உதாரணத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளதாக எச்சரிக்கின்றனர் அமெரிக்க பாதுகாப்பு வல்லுநர்கள்.