வடகொரியா 6வது முறையாக அணுகுண்டு சோதனை? தென்கொரியா குற்றச்சாட்டு
சியோல்: கடந்த 9ம் தேதி 5வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா 6வது முறையாக மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
2006ம் ஆண்டு முதல் முதலாக அணுகுண்டு வெடித்து சோதனையை நடத்தியது வடகொரியா. அதனைத் தொடர்ந்து 2009 மற்றும் 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து. கடந்த ஜனவரி மாதம் ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதனை செய்தது. 5வது முறையாக கடந்த 9ம் தேதி மீண்டும் புங்கியே ரி என்ற இடத்தில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டு சோதனை நடத்தியது. வடகொரியாவின் இந்த தொடர் அணுகுண்டு சோதனைகளுக்கு தென்கொரியா கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் வடகொரியாவிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளன. அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரியா 6வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது. வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.