வடகொரியா கிம் ஜாங் உன்னுக்கு என்ன ஆச்சு? திடீரென குண்டை தூக்கி போடும் "சகோதரி".. அட மறுபடியுமா?
பியோங்யாங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு அங்கு உறுதி செய்யப்பட்டநிலையில், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
வெற்றி.. வெற்றி.. வெற்றி.. சந்தோஷத்தில் துள்ளும் அதிபர் கிம் ஜோங் உன்.. வடகொரியாவில் என்ன நடந்தது?
கொரோனா பாதிப்பு
அதேபோல் வட கொரியாவில் கொரோனா பரிசோதனை வசதிகள் முறையாக செய்யப்படாததால், பாதிப்பு குறித்த செய்திகள் முழுமையாக வெளியாகவில்லை. இதனிடையே வட கொரியாவில் மொத்தமாக 48 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் 74 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா அதிபர்
இந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜான் உன் கூறுகையில், வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம். இதற்கு காரணமானவர்களை பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.
கிம் ஜாங் உன் சகோதரி
தொடர்ந்து கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் அளித்துள்ள பேட்டியில், வட கொரியாவில் கொரோனா வைரஸ் பரவலின் போது, அதிபர் கிம் ஜாங் உன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் கொரோனாவுக்கு எதிரான போர் முடியும்வரை, அவர் மக்களைப் பார்த்துகொள்ள வேண்டிய நிலையில் இருந்ததால் ஒரு நிமிடம் கூட ஒய்வு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
தென் கொரியா மீது குற்றச்சாட்டு
அதேபோல், வட கொரியாவில் கொரோனா பரவியதற்கு தென் கொரியாவே காரணம். அங்குள்ளவர்கள் பல ஆண்டுகளாக பலூன்களைப் பயன்படுத்தி துண்டுப் பிரசுரங்களை, வட கொரியாவுக்கு எதிரான பிரசாரங்களை காற்றில் மிதக்கச் செய்தனர். இத்தகைய துண்டுப் பிரசுரங்களை அனுப்பியது மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல். கொரோனா வைரஸ் உள்ள பொருட்களை அனுப்புவதன் மூலம் வட கொரியாவில் வைரஸை பரப்ப செய்யும் ஆபத்து உள்ளது. இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
சந்தேகம்
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளிவரும். சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதால், கிம் ஜாங் உன்னின் தோற்றம் எப்போதும் தீவிரமாக கண்காணிக்கப்படும். அந்த அடிப்படையில் அதிக எடை மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட கிம் ஜாங் உன், கடந்த மாதத்தில் மட்டும் 17 நாட்களாக மக்கள் முன் தோன்றவில்லை.
அதேபோல் கிம் ஜாங் உன்னின் குடும்பத்திற்கு இதய நோய் வரலாறு இருப்பதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதனிடையே கிம் ஜாங் உன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக அவரது சகோதரி கூறியுள்ளது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.