வட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பாளர்களை குறி வைத்தது அமெரிக்கா
இரண்டு வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையினை கொண்டுவந்துள்ளது. வட கொரியாவின் அணு ஏவுகணைத் திட்டத்தில் இந்த இரண்டு அதிகாரிகளும் முக்கிய பங்காற்றுவதாக அமெரிக்கா கூறுகிறது.
அந்த இரண்டு அதிகாரிகள் கிம் ஜோங்-சிக், ரி பியோங்-கொல் என அமெரிக்காவின் கருவூலத்துறை கூறியுள்ளது. வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில், இவர்கள் இருவரும் ''முக்கியத் தலைவர்கள்'' எனவும் கூறியுள்ளது.
வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று வட கொரியா மீது புதிய பொருளாதாரத்தடைகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்தது.
ஐ.நாவின் இந்த நடவடிக்கை போருக்கான செயல் என்றும்,முழு பொருளாதார முற்றுகைக்குச் சமமானது என்றும் வட கொரியா கூறியது.
அமெரிக்காவின் புதிய தடைகளால், இந்த இரு அதிகாரிகளும் அமெரிக்காவில் எந்த பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. அமெரிக்காவில் அவர்கள் ஏதேனும் சொத்து வைத்திருந்தால் முடக்கப்படும்.
வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளின் போது, கிம் ஜோங் உன்னுடன் இவர்கள் இருவரும் புகைப்படங்களில் தோன்றுவார்கள்.
கடந்த சில மாதங்களில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்தது. இந்த ஏவுகணை முழு அமெரிக்காவையும் அடையக்கூடியது என வட கொரியா கூறியிருந்தது.
இந்த இரண்டு அதிகாரிகளும், ஆயுத தயாரிப்பாளர் ஜங் சான்-ஹெக்கிம், கிம் ஜோங் உன்னால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் என கடந்த மே மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வில் கூறியிருந்தது.
ரி பியோங்-கொல் ரஷ்யாவில் படித்த முன்னாள் விமானப்படை தளபதி என்றும்,கிம் ஜோங்-சிக் ஒரு மூத்த ராக்கெட் விஞ்ஞானி என்றும் ராய்ட்டர்ஸ் கூறியிருந்தது.
பிற செய்திகள்:
- 'இந்திய உளவாளி' ஜாதவை சந்திக்க குடும்பத்திற்கு பாகிஸ்தான் அனுமதி
- ''பணபலத்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம். பொது தேர்தலில் சாத்தியமில்லை'’
- ஜெருசலேம் பிரச்சனைக்கு போப் பிரான்சிஸ் சொல்லும் தீர்வு என்ன?
- மோதி ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கருதினார் வாஜ்பாய்!