ஒரு வாரத்தில் இரண்டு முறை... வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.. தென்கொரியா அதிர்ச்சி
பியாங்யாங்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது. ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது.
பின்னர், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பான விவகாரத்தில், கொரிய எல்லைக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்தித்து கைகுலுக்கினார். இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவு தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து கோபமடைந்த வட கொரியா கடந்த வியாழனன்று ஏவுகணை சோதனை நடத்தியது. வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த ஏவுகணை 250 கி.மீட்டர் தூரம் பறந்து சென்றதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும், அதிகாலை குறுகிய தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் இரண்டை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.
இதனிடையே, தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், தமக்கு வட கொரியா மீது எந்தவொரு வருத்தமும் இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.