அணு ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கட்டும் - வடகொரிய ராணுவத்திற்கு அதிபர் கிம் உத்தரவு
சியோல்: வடகொரியா ராணுவம் விரைவில் அணு ஆயுதத் தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியது.
இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐ.நா.சபை அண்மையில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
பகிரங்க எச்சரிக்கை:
இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா நேற்று முன்தினம் தென்கொரியாவுக்கு அருகே 6 ஏவுகணைகளை கடலில் வீசியது. இது தென்கொரியா மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அணு ஆயுதத் தாக்குதல்:
இந்தப் பின்னணியில் அணு ஆயுத தாக்குதலை நடத்த தயார் நிலையில் இருக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு வடகொரியா அதிபர் ஜிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.
அச்சுறுத்தும் அமெரிக்கா:
இதுதொடர்பாக அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ, "வடகொரியாவின் இறை யாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவ வலிமையை கண்டு வடகொரியா அஞ்சாது.
சமாளிக்கவே முன்னெச்சரிக்கை:
மக்களின் பாதுகாப்பு, எதிரி நாடுகளுடன் ராணுவ சமநிலையைப் பேணவே அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறோம். எத்தகைய அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் வகையில் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.